கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் வரும் 04.06.2026 அன்று திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர் நலன் சார்ந்து தமிழக முதல்வர் அவர்களின் எடுத்த முடிவை எங்களது SSTA இயக்கம் சார்பாக மனதார வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் 01.06.2026 முதல் மூன்று நாட்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் எப்போதும் கோடை விடுமுறையில் பயிற்சி அளிப்பது என்பது ஏற்புடையதல்ல, இதே போல இதற்கு முன்னர் எண்ணும் எழுத்தும் அறிமுகப்படுத்தும் போது கோடை விடுமுறையில் ஐந்து நாட்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்போது பயிற்சி நாட்களுக்காக ஈடுசெய் விடுப்பு அளிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் நிறைவேற்றப்படவில்லை.
கடந்த காலங்களில் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது விடுமுறை நாட்களில் பயிற்சி எதுவும் வழங்கப்படாது என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கும் பயிற்சியினை ஜூன் 4-ம் தேதிக்கு பின்னர் நடத்தப்பட வேண்டும், அல்லது பயிற்சி நடைபெறும் நாட்களுக்கான ஈடுசெய் விடுப்பு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதை SSTA இயக்கம் வலியுறுத்துகிறது.
ஜே.ராபர்ட்
மாநில பொதுச் செயலாளர்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA)

No comments:
Post a Comment