நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறுதேர்வுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் ஏற்கெனவே ராஜஸ்தானில் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை விசாரித்த ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு, மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளைப் போலவே சுமார் 140 கேள்விகள் இடம் பெற்றிருந்த கைகளால் எழுதப்பட்ட மாதிரி வினாத்தாளை கைப்பற்றினர்.
இந்த நிலையில், மே 3 அன்று நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதனிடையே, மறுதேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ”2026 மே மாதத் தேர்வுக்காக மாணவ, மாணவிகளால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் உள்ளிட்டவை மறுதேர்வுக்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை.
கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்குத் திருப்பியளிக்கப்படும். தேசிய தேர்வு முகமையின் நிதியைப் பயன்படுத்தி மறுதேர்வு நடத்தப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment