'டெட்' எனப்படும் ஆசிரியர் பணிக்கான சிறப்பு தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். ஆசிரியர்களுக்காக, சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உட்பட, மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் கூறியதாவது:
ஆசிரியர் பணிக்கு, 'டெட்' எனும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசும், ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கமும், சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
இந்த சூழலில், ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த, சிறப்பு 'டெட்' தேர்வு நடத்த, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமான இந்த அரசாணையை, தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
ஆசிரியர்களுக்காக சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில், பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment