ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு.
கர்நாடக அரசு மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்தது.
அமைச்சரவை கூட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அரசு, தனியார் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி கர்நாடக அரசு, அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம்: ராஜ்நாத் சிங்
இந்த உத்தரவு அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் நிரந்தர, ஒப்பந்த, வெளிகுத்தகை உள்பட எந்த ரீதியில் பணியாற்றினாலும் அந்த பெண் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நடைமுறைக்கு முன்னதாக மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாதவிடாய் விடுமுறை ஆண்டுக்கு 6 நாட்கள் வழங்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.
பின்னர், அந்த குழு அதை 12 நாட்களாக அதிகரித்து பரிந்துரைத்தது. ஒருவேளை குறிப்பிட்ட மாதத்தில் அந்த விடுமுறையை எடுக்காவிட்டால், அதை சேர்த்து வைத்து அடுத்த மாதம் அந்த விடுமுறையை எடுக்க முடியாது.
மாதவிடாய் விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை. இந்த மாதவிடாய் விடுமுறை 18 வயது முதல் 52 வயது வரையுள்ள பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment