Aditya L1 Mission - மாணவர்களுக்கு கூற எளிய விளக்கம் - Asiriyar.Net

Thursday, September 7, 2023

Aditya L1 Mission - மாணவர்களுக்கு கூற எளிய விளக்கம்

 



ஆதித்யா-எல்1 மிஷன்: செயற்கைக்கோள் ஆரோக்கியமாக உள்ளது மற்றும் நன்றாக செயல்படுகிறது. பூமியில் செல்லும் முதல் சுழற்சி (EBN#1) பெங்களூரு ISTRAC இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. புதிய சுற்றுப்பாதை 245 கிமீ x 22459 கிமீ ஆகும். அடுத்த சுழற்சி (EBN#2) செப்டம்பர் 5, 2023 அன்று மதியம் 03:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. 


பூமியில் நமது இருப்பை நிலைநாட்ட முக்கியத் தேவையான ஆற்றலை வெப்பமாகவும் ஒளியாகவும் நமக்குக் கடத்திக் கொண்டிருக்கும் நமது குடும்பத்தின் முக்கிய அங்கமான  தலைவர் சூரியனை நோக்கி இன்று முற்பகல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 11:50 இந்திய நேரத்திற்கு விண்ணில் ஆதித்யா - எல் ஒன் ஏவப்பட உள்ளது. 


சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நட்சத்திரமான நம் சூரியன் தொடர்ந்து தனது ஒளி மூலமும் வெப்பம் மூலமும் 1500 லட்சம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும் தனது இருப்பை ஒரு தாய் போல தந்தை போல  உணர்த்திக் கொண்டே இருக்கிறது. 


சூரியன் ஒரு மாபெரும் ஹைட்ரஜன் ஒன்றிணைவு தத்துவத்தில் ( HYDROGEN FUSION REACTION)  நிகழும் அணுகுண்டு வெடிப்பு 


தொடர்ந்து அங்கு பல ஹைட்ரஜன் அணுகுண்டுகள் (H - NUCLEAR BOMBS)    வெடித்துக் கொண்டே இருக்கின்றன 


அத்தகைய சூரியனில் ஏற்படும் புயல்கள், சூறாவளிகள், எரிமலை வெடிப்புகள் அதனால் அதனைச் சுற்றியுள்ள வெளியில் அது வீசும் அக்கினிச் ஜுவாலைகள், நெருப்புக் கீற்றுகள் , அதிலிருந்து வெளிப்படும் அணுக்கதிர்கள், புற ஊதாக்கதிர்கள் 


அதனால் சூரிய குடும்பத்தில் வசிக்கும் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் 


நாம் விண்வெளியில் நிலைநிறுத்தி வைத்திருக்கும் 10,000 சொச்சம் செயற்கைக் கோள்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என பலவற்றை தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது


அதன் ஒரு பகுதியாக 1500 லட்சம் கிமீ தூரத்தில் இருக்கும் சூரியனை 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் இங்கிருந்து பயணித்து சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் இருந்து சூரியனை தொடர்ந்து கவனித்து வந்தால் எப்படி இருக்கும்? 


அது தான் "ஆதித்யா - எல் 1" விண்ணாய்வுக் கருவித் திட்டத்தின் நோக்கமாகும்


அது என்ன எல்-1 ? 

எல் -  1 என்றால் லேக் ரேஞ்ச் - 1 ( LAGRANGE-1)  பாய்ண்ட் என்று அர்த்தம் 


நமக்கு தெரியும் ஏனைய கோள்களைப் போல பூமிக்கு என பிரத்யேக ஈர்ப்பு விசை உண்டு. 


அதே போல சூரியனுக்கும் பலமான ஈர்ப்பு விசை உண்டு. 

பூமியை விட்டு அதன் ஈர்ப்பு விசையை மீறி சூரியனை நோக்கி செல்லும் போது ஓரிடத்தில் இவ்விரண்டு விண்வெளி அங்கங்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசை சரிசமமாக உணரப்படும் இடமே "LAG RANGE 1 POINT" 


 குறிப்பிட்ட அந்த பகுதியை அடைந்து அந்த புள்ளியை சுற்றி வட்டமடித்துக் கொண்டே சூரியனை நோக்கி ஆராய்ச்சிகள் செய்வதே ஆதித்யா-எல் 1 இன் பணியாகும். 


இதற்கான பயணத்திட்டம் இதோ 



பூமியில் இருந்து இன்று ஏவப்பட இருக்கும் ஆதித்யா -எல் 1 பூமியின் கீழ் வட்டப் பாதையில் சுற்றி வரும் இஸ்ரோவிடம் நேரடியாக பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்து வெளியே கிளம்பும் வண்ணம் ஆற்றலுடைய இஞ்சின் தொழில்நுட்பம் தற்போது இல்லை. 


பூமியின் ஈர்ப்பு விசையை உடைத்து வெளியேற "எஸ்கேப் வெலாசிட்டி" ( ESCAPE VELOCITY)  எனும் வேகத்தை ஒரு பொருள் அடைய வேண்டும். 


அதற்கு நிறைய ஆற்றல் தேவை. அவ்வளவு ஆற்றல் வேண்டுமென்றால் அவ்வளவு எரிபொருள் வேண்டும்அவ்வளவு எரிபொருளை ஏற்றிக் கொண்டு விண்வெளிக்குச் செல்லும் அளவு ஆற்றலுடைய இஞ்சின் வேண்டும். அது நம்மிடம் தற்போது இல்லை


எனினும் இத்தகைய குறையை சரிசெய்ய "ஹாஹ்மேன் ட்ரான்ஸ்ஃபர் ஆர்பிட்" (HOHMAN TRANSFER ORBIT)  எனும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதை பேச்சு வழக்கில் "ஸ்லிங் ஷாட் முறை" ( SLING SHOT) என்று அழைக்கிறோம். 


கவண் எரிவது போல சுழற்றி சுழற்றி வீசும் போது நாம் வீசும் பொருள் பல மடங்கு வேகமும் தூரமும் சென்று சேருமில்லையா? 


அதைப்போல ஆதித்யா எல் ஒன்னும் குறைவான எரிபொருளை உபயோகித்து  பூமியின் ஈர்ப்பு விசையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பூமியை மூன்று முறை நீள்வட்டப்பாதையில் சுற்றும் இவ்வாறு ஒவ்வொரு முறை சுற்றும் போது "பெரிக்ரி பர்ன்" ( PERIGREE BURN) செய்யப்படும். 


அதாவது ஒரு சுற்று முடியும் போது இஞ்சின் ஆன் செய்யப்பட்டு அடுத்த கட்ட உயரத்தை அடையும் இவ்வாறு மூன்று ரவுண்ட் சுற்றி முடிக்கும் போது  பூமியின் ஈர்ப்புக் கரங்களை விட்டு வெளியேறி சூரியனை நோக்கிய பாதையில் நிலை கொள்ளும். 


இந்த நிலையை அடைவதற்கு 18 நாட்கள் தேவைப்படும். 


எப்படி பள்ளி முடித்த குழந்தைகள் பள்ளிக்கு வெளியே காத்திருக்கும் தனது  தாயை நோக்கி விரைந்து செல்வரோ அதே போல பூமியின் ஈர்ப்பை விட்டுப் பிரிந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பால் உந்தப்பட்டு அதை நோக்கி தானாக நகரும். 

இப்போது மிகக் குறைவான எரிபொருளில் சூரியனின் ஈர்ப்பு விசையை பெரும்பகுதி பயன்படுத்தி 


மெதுவாக அதே சமயம் தொடர்ச்சியாக சூரியனை நோக்கிய தனது பயணத்தை விண்கலம் ஆரம்பிக்கும். 


சுமார் 109 நாட்கள் "க்ரூஸ் மோடில்"( CRUISE MODE)  பயணித்த பிறகு தனது திட்டப்படி லேக் ரேஞ்ச் -1 பாய்ண்ட்டை  அடையும். 



அந்த புள்ளியை மையமாக வைத்து வட்டமாகவும் இல்லாமல் நீள்வடிவமாகவும் இல்லாமல் இது ஏன் ஒரே வட்டப்பாதையிலும் இல்லாமல் 


"லிசாஜஸ் கர்வ்" ( LISSAGOUS FIGURES) என்றழைக்கப்படும் 


பல கோணங்களில் பல வடிவங்களில் அந்த புள்ளியை அடுத்த ஐந்து வருடங்களுக்கு "ஹாலோ ஆர்பிட்டில்" (HALO ORBIT)  சுற்றிக் கொண்டே இருக்கும். 


இதில் சிறப்பான விசயம் என்னவென்றால் அந்த புள்ளியின் ஒரு பக்கம் செல்லும் போது சூரியனின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சுற்றும் மற்றொரு பக்கம் செல்லும் போது பூமியின் ஈர்ப்பு விசையை பயன்படுத்தி சுற்றும். 


எப்படி கயிறு இழுக்கும் போட்டியில் மாறி மாறி இழுப்போமோ அது போல பூமியும் சூரியனும் மாறி மாறி அங்கிட்டும் இங்கிட்டும் இழுக்க அந்த புள்ளியை ஐந்து வருடங்கள் சுற்றுவதற்கு மிக மிக குறைவான எரிபொருள் ஆற்றலே தேவைப்படும். 


எனவே ஆற்றலின் பெரும்பகுதியை தான் செய்ய வேண்டிய சூரியனை ஆய்வு செய்யும் பணிகளுக்கு செலவு செய்து ஐந்து வருடம் தாக்குப் பிடித்து நமக்கு அரிய பல தகவல்களை ஆதித்யா அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


  • குறைவான செலவு 
  • குறைவான எரிபொருள் 
  • நீண்ட கால பயணத்திட்டம் 
  • வேகத்தை விட விவேகத்தை பயன்படுத்துவது 
  • சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாதகமாக்கி வெற்றி காண உழைப்பது


இதுவே இஸ்ரோவின் நிகழ்கால வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன.  


இதுவரை நடைபெற்ற  விண்வெளி  திட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளேதலைமை இயக்குநர்களாக பணிபுரிந்துள்ளனர். 


சந்திரயான் மற்றும் தற்போதைய ஆதித்யா -எல் 1 வரை 

  • திரு. மயில்சாமி அண்ணாதுரை
  • திரு.கே. சிவன் 
  • திருமதி. வனிதா 
  • திரு . வீரமுத்துவேல் 


தற்போதைய இந்த ஆதித்யா எல்1 திட்டத்திற்குதென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி திருமதி. நிஹர் சாஜி அவர்கள் இயக்குநராக செயல்பட உள்ளார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். 


நாம் ஒவ்வொருவரும்  அமைதியாக  துயில் கொள்ளச் செல்வதே அடுத்த நாள்புதிதான மற்றொரு விடியலைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் தானே.. 


அத்தகைய விடியலை நமக்கு நாள்தோறும் பரிசளிக்கும்  சூரியனை நோக்கிய நமது பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் 


நன்றி 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Post Top Ad