வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் - JACTTO GEO விளக்க அறிக்கை (14.02.24) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 14, 2024

வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் - JACTTO GEO விளக்க அறிக்கை (14.02.24)

 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் சந்திப்பு மற்றும் வாக்குறுதியினைத் தொடர்ந்து 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு


அன்புள்ள உயர்மட்டக்குழு உறுப்பினர்களே , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களே , வணக்கம் . 


ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து , நேற்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் , மாண்புமிகு அமைச்சர்கள் திரு . ஏ.வ.வேலு , திரு . சு . முத்துசாமி , திரு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர் . 


இக்கோரிக்கை தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர் . இதன் தொடர்ச்சியாக , நேற்று மாலை மாண்புமிகு அமைச்சர் ( நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ) அவர்கள் பத்திரிக்கைச் செய்தி ஒன்றினை வெளியிட்டார் . போராட்ட நேரத்தில் , மாண்புமிகு அமைச்சர் அவர்களின் பத்திரிக்கைச் செய்தி கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய நிலையில் , ஜாக்டோ ஜியோ இந்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்து , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் . 


ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையினை ஏற்று , மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார் . இச்சந்திப்பின்போது , நமது வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது . 


பல்வேறு மாநில அரசுகள் திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் , தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும் , காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும் , காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தோம் . 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் , பழைய ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு நடைமுறைப்படுத்தாமல் வேறு அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிதி நிலைமையினைச் சீராக்கி , விரைவில் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார் . இச்சந்திப்பின்போது , மாண்புமிகு அமைச்சர்கள் திரு . உதயநிதி ஸ்டாலின் , திரு . ஏ.வ.வேலு , திரு . சு . முத்துசாமி , திரு . தங்கம் தென்னரசு , திரு . அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் மாண்புமிகு முதலமைச்சரின் செயலாளர்களும் உடனிருந்தனர் . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வாக்குறுதியினை ஏற்றும் ஜாக்டோ ஜியோவின் மீது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொண்டுள்ள மாறாத அன்பினையும் கருத்தில் கொண்டு , 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது .





Post Top Ad