அரசு ஊழியர்கள் கைது.. பட்ஜெட்டில் ஏமாற்றம் - அடுத்தகட்ட போராட்டத்தில் CPS ஒழிப்பு இயக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 25, 2024

அரசு ஊழியர்கள் கைது.. பட்ஜெட்டில் ஏமாற்றம் - அடுத்தகட்ட போராட்டத்தில் CPS ஒழிப்பு இயக்கம்!

 



CPS ஒழிப்பு இயக்கத்தினர் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் அடக்குமுறையில் ஈடுபடும் தமிழ்நாடு அரசை எதிர்த்து பிப்ரவரி 26ஆம் தேதி முதல் போராட்டம் செய்யவிருக்கின்றனர்.


தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருப்பது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான். தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை ரத்து செய்யக் கோரி ’CPS ஒழிப்பு இயக்கம்’ என்ற பெயரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் இதில் அங்கமாக உள்ளனர். இவர்களின் முக்கிய நோக்கமே CPS திட்டத்தை ஒழிப்பதுதான்.


இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் ஒவ்வொன்றாக பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. ஆனால் பல்வேறு விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழ்நாட்டில் மட்டும் இத்திட்டத்தை அமல்படுத்தாமல் இருப்பது ஏன் என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவுக்கு ஆதரவளித்தனர். ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தாமல் ஏதேதோ காரணம் கூறுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வாக்குகளை வாங்கிவிட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு இப்போது தங்களை ஏமாற்றுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்தாத போராட்டங்களே இல்லை என்று கூறலாம். உயிரைக் கொடுத்தாவது பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியே ஆகவேண்டும் என்ற உறுதியோடு அவர்கள் போராடி வருகின்றனர்.


முதல்வர் இல்ல முற்றுகை போராட்டம் சமீபத்தில் நடத்த திட்டமிடப்படிருந்தது. அந்த சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸை காவல் துறையினர் கைது செய்தனர். இது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தங்களது கோரிக்கையையும் அரசின் வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் இவ்வாறு அடக்குமுறை செய்வது முறையாகாது என்று அவர்கள் விரக்தியில் உள்ளனர்.


தமிழக அரசின் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாதது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி வருகிற 26ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில மையம் முடிவு செய்துள்ளது. உயிர் தந்தேனும் நமது வாழ்வாதாரக் கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய ஒன்றுபட்டு போராடுவோம் என்று உறுதியோடு அவர்கள் போராட்டத்துக்கு தயாராகியுள்ளனர்.



Post Top Ad