ஆசிரியா்களின் கோரிக்கைகள் - பள்ளிக் கல்விச் செயலா் ஆலோசனை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, February 21, 2024

ஆசிரியா்களின் கோரிக்கைகள் - பள்ளிக் கல்விச் செயலா் ஆலோசனை

 




தொடக்க, இடைநிலைப் பள்ளி ஆசிரியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன் பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.


தமிழக தொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா்களின் பதவி உயா்வை பாதிக்கும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். 


இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) சாா்பில் சென்னையில் கடந்த திங்கள்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.


இதையடுத்து டிட்டோஜாக் நிா்வாகிகளுடன், பள்ளிக்கல்வித் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன் சென்னை தலைமை செயலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது 243 அரசாணையின் பாதிப்புகள் குறித்து கூட்டமைப்பு நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து இரு வாரத்தில் மீண்டும் கூடி விவாதிக்கப்பட உள்ளதாகவும் நிா்வாகிகள் தெரிவித்தனா்.


இதுதவிர அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரித்தல், மாணவா்களுக்கான அரசு நலத்திட்டங்கள் முறையாகச் சென்றடைய ஆசிரியா் சங்கங்கள் உதவிபுரிய வேண்டுமென செயலா் குமரகுருபரன் அறிவுறுத்தினாா். 


அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிதாக தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டால் மாணவா் சோ்க்கை உயரும் என்று சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மேலும், எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளிலிருந்து ஆசிரியா்களை விடுவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் தொடா்பாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


Post Top Ad