மாபெரும் வாசிப்பு இயக்கம் - முன்னோடி திட்டம் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 10, 2023

மாபெரும் வாசிப்பு இயக்கம் - முன்னோடி திட்டம் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

 



மாபெரும் வாசிப்பு இயக்கம் என்னும் முன்னோடி திட்டத்தில் பங்கு பெற எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு (The Tamil Nadu Government School Education Department invites writers to participate in the pilot program of the Great Reading Movement)...


எழுத்தாளர்களுக்கு ஓர் அழைப்பு

*************************************


வணக்கம்!

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் முக்கியமான திட்டமான மாபெரும் வாசிப்பு இயக்கத்தில் தங்களின் படைப்புகளைத் தந்து பங்கேற்பினை நல்க அன்புடன் அழைக்கிறோம்.


தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் தற்போது முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற வகைகளில் ஒரு கதை, ஒரு புத்தகம், 16 பக்கம் என முதல் கட்டமாக 53 கதைப் புத்தகங்கள்  சிறார் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு ஆளுமைகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு,  அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.   


அடுத்தகட்டமாக 197 நூல்கள்  உருவாக்கப்பட்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தொடர்ந்து வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


வாசிப்பு இயக்கத்திற்காக கீழ்க்கண்ட கருப்பொருளைக் கொண்டு தங்களது படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.


* குழந்தைகள் எளிதில் வாசிக்கும் வகையில் எளிய மொழி நடை.


* சின்னச் சின்ன வாக்கியங்கள்.


* குழந்தைகள் பரவலாக பயன்படுத்தும் சொற்கள், நகைச்சுவை, வேடிக்கைக் கதைகள் வரவேற்கப்படுகின்றன. 


• மாற்றுத் திறனாளிகள், திருநர், விளிம்பு நிலை மனிதர்களை உள்ளடக்கிய கதைகள் 


* பெண்ணுரிமை,  மனிதநேயம், சகோதரத்துவம், சமத்துவம், அறிவியல் புனைவுகள், எளிய மனிதர்களின் வாழ்வியல், குழந்தைகளின் மனநலம் போன்றவற்றை கருப்பொருளாகக்  கொண்ட கதைகள் வரவேற்கப்படுகின்றன.


 தேர்வு  செய்யப்படும் கதைகள்   வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கேற்ப படைப்புக் குழு செழுமைப்படுத்தும்.


கதைகளைத் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ அரசால் அமைக்கப்பட்ட சீராய்வுக் குழுவிற்கு முழு அதிகாரம் உண்டு. 


மேலும் சீராய்வுக் குழுவின் முடிவே இறுதியானதாகும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :

1. தயவுசெய்து தங்களது கதைகளை வாசிப்பு இயக்கத்தின் தேவைக்கு ஏற்றவாறு எழுதி அனுப்பவும்.


2. படைப்புகளை தமிழிலேயே அனுப்பவும்.


3. தங்களால் எழுதப்பட்ட தங்களது சொந்தப் படைப்புகளை  மட்டும் அனுப்பவும்.


4. தங்களுடைய கதைகள் தெரிவு செய்யப்பட்டால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.


5. தங்களுடைய படைப்புகளாயினும் ஏற்கனவே வேறு ஏதேனும் புத்தகத்திலோ அல்லது இதழ்களிலோ பதிப்பிக்கப்பட்டிருந்தால் அதனைக் குறிப்பிடவும்.


6. மொழிபெயர்ப்புக் கதைகளாக இருப்பின் அது பற்றிய முழு  விவரத்தைக் குறிப்பிடவும்.


தங்களுடைய கதைகள் வாசிப்பின் நிலைகளான... 


  • "நுழை" எனில் 200 முதல் 250  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
  • "நட" எனில் 250 முதல் 300  வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
  • "ஓடு" எனில் 300 முதல்  400   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
  • "பற" எனில் 400 முதல் 500   வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கான ஓவியம், வடிவமைப்பு, செழுமைப்படுத்துதல் பற்றி தங்களிடம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும்.


தேர்வு செய்யப்படவுள்ள  நூல்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிக்  குழந்தைகளுக்கும் வகுப்பறையிலும் நூலகங்களிலும் வழங்க இருப்பதால் கதைகளுக்கு சன்மானம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 


தேர்வு செய்யப்பட்ட கதைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


17/09/2023 அன்று மாலை 5.00 மணிக்குள்ளாக ssatnvit@gmail.com  என்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தங்களது படைப்புகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இது குறித்து மேலும் விவரங்களுக்கு  8248259501 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.


மிக்க நன்றி!


மாநில ஒருங்கிணைப்பாளர்,

வாசிப்பு இயக்கம்,

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு.




Post Top Ad