திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, நேற்று கலெக்டர் பிரதாப் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியத்திடம், கடந்த மார்ச் மாதம் நடந்த அரசு பொதுத்தேர்வில் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார்.
இதில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 222 மாணவர்களில், 67 பேரும், பிளஸ் 1 தேர்வு எழுதிய 315 மாணவர்களில், 143 பேரும் தோல்வி அடைந்ததும், தமிழ் பாடத்தில் 66 பேரும், கணித பாடத்தில் 70 பேரும், கணக்குப்பதவியல், வணிகவியல் பாடத்தில் 50 பேரும், மற்ற பாடங்களில் 24 பேரும் தோல்வி அடைந்து தெரியவந்தது.
தொடர்ந்து கலெக்டர் பிரதாப், தலைமை ஆசிரியரிடம், 'ஏழு ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதை ஏன் கண்காணித்து தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவில்லை. ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துகின்றனரா என்பதை ஆய்வு செய்யவில்லையா? இதைவிட உங்களுக்கு என்ன வேலை இருக்கு.
'அதிக மாணவர்கள் தோல்வி அடைந்தற்கு காரணம் என்ன? தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறதா' எனக் கேட்டார்.
அதற்கு தலைமை ஆசிரியர், 'சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது' எனக் கூறியதும், 'எத்தனை மாணவர்கள் வந்துள்ளனர்' என, கலெக்டர் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காததால், ஆசிரியர்களை வரவழைத்து, 'மாணவர்கள் எத்தனை பேர் வந்துள்ளனர்' எனக் கேட்டார்.
அதற்கு ஆசிரியர்கள் தடுமாறியதால், கலெக்டர் கோபமடைந்து தலைமை ஆசிரியரிடம், 'நீங்கள் வாங்கும் சம்பளத்திற்காவது வேலை செய்யுங்கள். ஆசிரியர்கள் மனசாட்சியுடன் வேலை செய்ய வேண்டும்.
'உங்கள் அலட்சியத்தால், இந்தாண்டு, 210 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் துணைத் தேர்வில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும். தவறும்பட்சத்தில், தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.
கலெக்டர் பிரதாப், திருத்தணி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை ஆய்வு செய்த பின், மாணவியர் சேர்க்கை பிரிவுக்கு சென்ற கலெக்டரிடம், மாணவியரை பள்ளியில் சேர்க்க வந்த இரண்டு பெற்றோர், 'சேர்க்கைக்கு கட்டணம் வசூலிப்பதாக' புகார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment