பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் நோ்முக உதவியாளா், கண்காணிப்பாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் உள்பட அமைச்சுப் பணியாளா்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அதேபோல, தகுதியானவா்களுக்கு பதவி உயா்வும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-26-ஆம் கல்வியாண்டில் அமைச்சுப் பணியாளா்களுக்கு இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமைச்சுப் பணியாளா்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு மே 26 முதல் ஜூன் 11 வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது.
அதில் கண்காணிப்பாளா் நிலையிலானோருக்கு மாவட்டத்துக்குள் மாறுதல், விருப்ப மாறுதல், பரஸ்பர பணியிட மாறுதல் ஆகியவை மே 26, 29, 30-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொடா்ந்து, உதவியாளா் பணியிடத்துக்கு ஜூன் 4-ஆம் தேதியும், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், பதிவறை எழுத்தா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஜூன் 6, 9, 11-ஆம் தேதிகளிலும் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment