சம வேலைக்கு சம ஊதியம் - 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன - ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை என 19 நாட்களுக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
19 நாட்களுக்கு உரிய ஊதியம், பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியானது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் கிடையாது என தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், சம்பளம் படித்தம் செய்ய உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.
No comments:
Post a Comment