ஆண்டு தேர்ச்சி பட்டியல் இரண்டு நகல்கள் தேவைதானா தேவையில்லாத சில படிவங்கள் - Asiriyar.Net

Saturday, April 20, 2024

ஆண்டு தேர்ச்சி பட்டியல் இரண்டு நகல்கள் தேவைதானா தேவையில்லாத சில படிவங்கள்

 




1. ஆசிரியர்களின் விடுப்பு கால முகவரி 

எல்லா ஆசிரியர்களின் முகவரிகளும் எமிஸ் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் மேலும் எல்லோருடைய வாட்ஸ்அப்  அந்தந்த வட்டார கல்வி அலுவலரின் ஆசிரியர்கள் குழுவில் இடம் பெற்றிருக்கிறது இப்படி இருக்க விடுப்பு கால முகவரி என்ற பட்டியல் படிவம் தேவையா 


2. ஆசிரியர்களின் விடுப்பு விவரம் 

ஆசிரியர்கள் எடுக்கும் விடுப்புகள் எமிஸ் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது எமிஸ் இணையதளத்தில் விடுப்பை பதிவு செய்தால் மட்டுமே அன்றைய தினம் அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்க தற்செயல் விடுப்பு மற்றும் மதசார்பு விடுப்பு தவிர பிற விடுப்புகள் விவரங்களை பட்டியல் போட்டு தர வேண்டுமா ஏன் தர வேண்டும் வட்டார கல்வி அலுவலகத்தில் நாம் அனுப்பும் விடுப்புகளுக்கு ஒப்புதலை ஒழுங்காக தந்து எஸ் ஆர்  பதிவு செய்தால் இந்த படிவம் தேவையற்றது 


3. அடுத்த ஆண்டுக்கான இலவச சீருடை இலவச புத்தகம் இலவச பாடநூல் தேவைப்பட்டியல் 

இந்தப் படிவம் இந்த ஆண்டு நாம் தேர்ச்சி அளிக்கும் மாணவர்கள் அப்படியே ஒரு வகுப்பு உயர்த்தி தேவைப்பட்டியலாக சமர்ப்பிக்க வேண்டி உள்ளது ஏன் இவ்விதம் எமிஸ் இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாமே இதற்கு ஒரு படிவம் தேவையா 


4. வகுப்புவாரியான மதிப்பெண் பட்டியல் படிவம் 

ஏற்கனவே ஆசிரியர் மூன்று பருவங்களுக்கான மதிப்பெண்களை வகுப்பு ஆசிரியர் பதிவேடு திரள் பதிவேடு

ஒட்டுமொத்த ஆண்டு சராசரி மதிப்பெண் பதிவேடு மற்றும் மாணவர் முன்னேற்ற தேர்ச்சி அறிக்கை அட்டை ஆகியவற்றில் பதிவு செய்துள்ளோம் இதனை மீண்டும் வகுப்பு வாரியாக மூன்று பருவத்தையும் எழுதி மூன்று பருவத்திற்கு சராசரியும் எழுதி அதையும் இரண்டு நகல்கள் எழுதி சமர்ப்பிக்க வேண்டுமா 


5=தேர்ச்சி விதி படிவம் 

இந்தப் படிவம் தேர்ச்சி விதிகளை எழுதி வைக்கப்பட வேண்டும் தேர்ச்சி விதிகள் என்ன மூன்று பருவங்களிலும் குறைந்தது 40 சதவீதம் மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும் பள்ளிக்கு குறைந்தது 75 சதவீத வருகை நாட்கள் வருகை புரிந்திருக்க வேண்டும்


இவ்விதிகள் பூர்த்தி அடையாதவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி தவிர்ப்பு வழங்கி அவன் என்ன நிலையில் இருந்தாலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி அளிக்கிறோம் என்று எழுதி உத்திரவாதம் அளிக்கிறோம் இது தமிழகம் முழுக்க ஊரறிந்த ஒன்று இதை ஏன் எழுதி வைக்க வேண்டும் 


எனவே மேற்கண்ட படிவங்கள் தேவையற்றது மட்டுமல்ல எமிஸ் இணையதளத்தில் இருந்து எல்லா தகவலையும் வட்டார கல்வி அலுவலர் அல்லது வட்டார வள மைய மேற்பார்வையாளர் அல்லது வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோரால் அவரவர் லாகினில் சென்று இப்பள்ளி விவரங்களை நொடி பொழுதில் ஒரு சொடுக்கில் எடுக்க கூடிய விவரங்களை ஆசிரியர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதி இரண்டு நகல்கள் வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தால் அவை அனைத்தையும் சீண்டுவார் இன்றி ஜூன் மாத இறுதியில் எடைக்கு போடுவார்கள் இதுதான் நடைமுறை ஐயகோ எப்பொழுது இதற்கு விடிவுகாலமோ


*எமிஸ் இருக்க பதிவேடுகளும் படிவங்களும் இன்னும் எதற்கு?*

 


ஒரு விவசாயிக்குத் தம் அறுவடை நாள் அன்று ஒட்டுமொத்தமாக ஆயிரம் வேலைகள் இருப்பது போல ஒவ்வொரு பொதுத்தேர்வு அல்லாத ஆசிரியருக்கும் நிறைய பணிகள் இருக்கின்றன. 

அதாவது, ஒன்று முதல் ஒன்பது வகுப்பு முடிய தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் தேர்ச்சி அறிக்கை மற்றும் சுருக்கம் இரண்டு நகல்கள் சொந்த கைப்பட தயாரித்தல் வேண்டும். இதுதவிர, வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் இரண்டு நகல்கள் உருவாக்கப்படுதல் அவசியம். 


அதன்பின், இவை சார்ந்த பள்ளிப் பதிவேடுகளில் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அந்தந்த வகுப்பாசிரியர்கள் சாப்பாட்டுப் பந்தியில் சாப்பிடுபவர் பக்கத்திலேயே கால்கடுக்க நிற்பது மாதிரி தமக்கான முறை வரும்வரை காத்திருந்து அவசர அவசரமாகத் தாமும் பிழையின்றி அவற்றையெல்லாம் பதிந்து தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பது அறியத்தக்கது.


இதுதவிர, நடப்புக் கல்வியாண்டிற்குரிய மாதவாரியான பள்ளி வேலை நாள்கள் விவரம், ஆசிரியர்கள் அனைத்து வகை விடுப்பு விவரங்கள், விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் இருப்பு முகவரி, மாற்றுத்திறன் மாணவர்கள் பெயர் பட்டியல் ஆகியவை அந்தந்த மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் முன் சமர்ப்பிக்க ஏதுவாக எழுதப்பட வேண்டியது அவசியம்.


மேலும், பள்ளி அமைவிடத்திற்குரிய பகுதிகளில் வாழ்வோர் குறித்து ஏற்கனவே வேகாத வெயிலில் வீடுவீடாக மேற்கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் கூடிய பள்ளி வயதுப் பிள்ளைகள் பற்றிய விவரங்களை குடியிருப்புப் பகுதி வாரியாக எழுதி முடித்திருக்க வேண்டும் என்பது விதி. அதிலிருந்து மக்கள்தொகை, 5 வயதிற்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர், 0 - 4 வயதினர், 5 வயதிற்கு மேற்பட்டோர், 6 - 10 மற்றும் 11 - 14 வயதினரில் பள்ளி வயதுப் பிள்ளைகள், இப்பள்ளியில் படிப்பவர்கள், வேறு பள்ளியில் படிப்பவர்கள், பள்ளி இடை நின்றவர்கள், எங்கும் படிக்காதோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற விவரங்கள் சாதிவாரியாகத் தொகுக்கப்பட்டு அதன் சுருக்கப் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.


தவிர, வகுப்பு வாரியாகவும் பயிற்றுமொழி வாரியாகவும் எதிர்வரும் கல்வியாண்டிற்கு தேவையான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் ஆண், பெண் வாரியாக இலவச சீருடைகள் தேவைப்பட்டியல் அடங்கிய படிவம் தரப்படுதல் முக்கியம். அதுபோக, எதிர்வரும் புதிய கல்வியாண்டில் சேர்க்கப்பட இருக்கும் 5+ குழந்தைகளின் பெயர், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, ஆதார் எண், கைபேசி எண், மதம், சாதி, குடும்ப வருமானம் உள்ளடக்கிய விவரங்களைக் கொண்ட படிவமும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 


இவையனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் மிகுந்த பயபக்தியுடன் உருவாக்கப்படுவதுதான் சிறப்பு. ஒரு மடிப்போ, கிழிசலோ எதுவும் இருக்காது. அவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் அழகாகவும் நேர்த்தியாகவும் வெக்கையில் வியர்வை வழிய ஓய்வறியாமல் உற்பத்தி செய்த படிவங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரின் ஒப்புகைக்குப் பின் கிடக்கும் நிலையைப் பார்க்கவே எரிச்சலும் வேதனையும் வரும். இதற்காகவா இவ்வளவு பாடுபட்டோம் என்று!


காலத்திற்கு தக்க நவீனமயமாகி வரும் பள்ளிகல்வியில் இன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆளை அசத்தும் புதுப்புது செயலிகள்! கல்வி சார்ந்த அனைத்துவிதமான தகவல்களையும் தரவுகளையும் ஒருசில நிமிடங்களில் பள்ளி, ஒன்றிய, மாவட்ட வாரியாகத் தேடித் தொகுத்திடும் களஞ்சியமாக தமிழ்நாடு அரசு வடிவமைத்துள்ள எமிஸ் (Educational Management Information System) உள்ளது. 


இதில் மாணவர், ஆசிரியர், பள்ளி, பதிவேடு, எண்ணும் எழுத்தும், அறிக்கை சார்ந்து எல்லாவித தகவல்களும் முறையாக ஆசிரியர்களால் அவ்வப்போது இராப்பகலாகப் பதியப்பட்ட துல்லியமான தகவல்கள் ஏராளம் காணக் கிடைக்கின்றன. வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் இதை நிர்வகிக்கும் ஒருசிலரால் உட்கார்ந்த இடத்தில் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகளை மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை வாட்டிவதைத்து எமிஸ் நடைமுறைக்கு முன் (Before Emis Era) கடைபிடித்து வந்த பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் படிவங்கள் தயாரிப்புப் பணிகளை எமிஸ் நடைமுறைக்குப் பின் (After Emis Era) சுமக்கச் சொல்வது என்பது மிகுந்த வேதனைக்குரியது. 


பொதுவெளியில் எமிஸ்ஸுக்கு எதிரானவர்கள் ஆசிரியர்கள் என்கிற தவறான கருத்து ஒன்று இங்கு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அது உண்மையும் அல்ல. பதிவேடுகள் பராமரிப்பு என்கிற மரபுடன் குறையொன்றுமில்லை என்கிற ரீதியில் குடும்பம் நடத்தி வந்த ஆசிரியர் பெருமக்களை எமிஸ் என்கிற நவீனத்துடனும் சேர்ந்து வாழச் சொன்னதுதான் கொடுமை. 


அதாவது, LED விளக்கில் பளிச்சென்று பளபளக்கும் வீட்டில் பழங்கால சிம்னி விளக்கொளியில் பழமை மாறாமல் படிக்கச் சொல்வதற்கு ஒப்பானதல்லவா இது? இஃதென்ன ஆசிரியர்களுக்கு அலுவலர்கள் ஆண்டுதோறும் கல்வியாண்டின் இறுதியில் அளிக்கும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும் வீட்டுப்பாடமா? இது யாருக்குத் தான் சலிப்பையும் எரிச்சலையும் தராது. சொல்லுங்கள்!


அதனால்தான், எமிஸ் மீது தீராத, தீவிர எதிர்ப்பு ஆசிரியர்களிடையே எழுகிறது. கல்வித்துறை இதுகுறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டியது இன்றியமையாதது. எமிஸில் ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் முப்பருவத் தேர்வு சார்ந்த அனைத்து விவரங்களையும் பிழையில்லாமல் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது என்று அவசர அவசிய சுற்றறிக்கை ஒன்று விரைந்து வந்தால் நல்லது. 


இந்த இரட்டைக் குதிரை சவாரியில் இன்னும் எத்தனைக் காலம் ஆசிரியர் சமுதாயம் உழன்று கொண்டிருக்க வேண்டும்? அதில் ஒன்று மெல்ல ஓடும் மட்டக் குதிரை. மற்றொன்றோ வேகமாகப் பாயும் பந்தயக் குதிரை! இவற்றிற்கு நடுவில் கொஞ்சம் நிம்மதியைக் காணோம் என்று பரிதவித்து நிற்கும் ஆசிரியர் கூட்டம். ஒன்றையே திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப செய்யச் சொல்லும் வேலையிலிருந்து ஆசிரியர்களை விடுவியுங்கள். அல்லது எமிஸை விட்டு விடுங்கள்!


*எழுத்தாளர் மணி கணேசன்*



Post Top Ad