மாணவச் செல்வங்களே! - அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்!! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம் - Asiriyar.Net

Monday, August 14, 2023

மாணவச் செல்வங்களே! - அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்!! - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

 




 மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும் – மனஉறுதியுடனும் இருக்க வேண்டும் என அண்ணனாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை திரு.செல்வசேகர் அவர்களும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார்.


பிள்ளைகளை பலிவாங்கிய நீட் – இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது. குரோம்பேட்டை அரசு மருத்துமவமனையில் செல்வசேகர் அவர்களுடைய திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நமக்கே ஆறுதல் தேவை என்ற நிலையில், அவருடைய உறவினர்களைத் தேற்றினோம்.


நீட் ரத்துக்காக இருமுறை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும், அதனை கிடப்பில் போடுவதும், திருப்பி அனுப்புவதும் என்று ஆளுநர் தன் கடமையிலிருந்து தவறியது தான் இந்த தற்கொலைகளுக்கு காரணம்.தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை சிதைத்து – உயிரைப்பறிக்கும் நீட்டை ஒழிக்கிற காலம் தொலைவில் இல்லை. 


இதற்கான தீர்வு 2024 மக்களவைத்தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும். எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும் – மனஉறுதியுடனும் இருக்க வேண்டுமென உங்களின் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



Post Top Ad