அடுத்த சிக்கலுக்கு தயாராகும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 25, 2023

அடுத்த சிக்கலுக்கு தயாராகும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள்

 

1978 ல் இருந்து தாங்கள் பெற்று வந்த உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை பெற்றே தீருவோம் என்று உச்சநீதிமன்றம் சென்ற பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.


உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை பெற ஏறத்தாழ அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.


அது என்ன எனில் தாங்கள் மீண்டும் BT ஆக சென்று பழைய முன்னுரிமையின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை பெறுவது.


50 க்கும் மேற்பட்ட பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பதவி இறக்கம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளனர்.


தாங்கள் பதவி உயர்வை நிரந்தர உரிமை விடல் செய்வதாக எழுதிக் கொடுத்து பட்டதாரி ஆசிரியராக பதவி இறக்கம் பெற்றுள்ளனர்.


முதுகலை ஆசிரியர் பதவியைததானே நிரந்தர துறப்பு செய்துள்ளோம். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை வேண்டாம் என்று சொல்ல வில்லையே என்பது இவர்கள் வாதம்.


சரிங்க.


இவர்களுக்கு பழைய முன்னுரிமை கிடைக்குமா?


*200% கிடைக்காது*. 


விதிகளின் படி தற்போதுள்ள 60 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பின்னால் இவர்கள் வைக்கப்பட வேண்டும்.


உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கின் அடிப்படையே ஒருவருக்கு இரு பணி/பதவிகளில் பணி உரிமை (Lien) உள்ளதா இல்லையா என்பதே.


அடிப்படை விதி 12 ன் படி ஒரு நபர் ஒரே நேரத்தில் இரு நிரந்தர பணிகளில் (Service) உரிமை கோர இயலாது.


12(a). Two or more Government servants cannot be appointed substantively to the same

permanent post at the same time.

(b) A Government servant cannot be appointed substantively to two or more

permanent posts at the same time.

(c) A Government servant cannot be appointed substantively to a post on which

another Government servant holds a lien.


அடிப்படை விதி 14 A(d) இன் படி ஒரு ஒரு நிரந்தர பணியிடத்தில் பணியாற்றும் ஒரு நபர் வேறொரு நிரந்தர பணியிடத்திற்கு நியமனம் பெற்றவுடன் முதல் பணியில் உள்ள உரிமை (Lien) தானாகவே இரத்து ஆகிவிடும்.


14 A (d). A Government servant’s lien on a post shall stand terminated on his acquiring a lien

on a permanent post (whether under the Government or the Central Government or any other

State Governments) outside the cadre on which he is borne.


இந்த வரிகள் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆக *பட்டதாரி ஆசிரியர் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற போதே பட்டதாரி பணியிடத்தில் உள்ள உரிமை போய்விட்டது.*


பதவி இறக்கம் பெற்றவர்கள் புதிதாக அப்பணியில் சேர்ந்ததாகவே அர்த்தம்.


மேலும் ஒழுங்கு நடவடிக்கை விதி 8 ன் படி பதவி இறக்கம் என்பது ஒரு பெரும் தண்டனை.(Major Punishment).


உரிய விசாரணை மேற்கொள்ளாமல் ஒரு பொது ஊழியரை பதவி இறக்கம் செய்யக்கூடாது என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்து 311(2).


Article 311 (2):

No civil servant shall be dismissed or removed or reduced in rank except after an enquiry in which s/he has been informed of the charges and given a reasonable opportunity of being heard in respect of those charges.


பெரும் தண்டனை பெறுவதற்கு இணையான பதவி இறக்கம் பெறுபவர்களுக்கு எப்படி பழைய முன்னுரிமையின் படி பதவி உயர்வு கிடைக்கும்?


ஆக எப்படியாகினும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிராகியே தீருவேன் என்று பட்டதாரி ஆசிரியராக பணியிறக்கம் பெற்றால் மிகப்பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்வது உறுதி.


இரா.சீனிவாசன்

மாநில சட்ட செயலாளர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்


Post Top Ad