தள்ளி போகிறது பள்ளி கோடை விடுமுறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 30, 2024

தள்ளி போகிறது பள்ளி கோடை விடுமுறை

 



இந்த ஆண்டு கோடை விடுமுறையை எப்போது தொடங்கும். எப்போது வரை இருக்கும். தேர்தலுக்குள் ஆண்டு இறுதித் தேர்வுகள் எல்லாம் முடிந்துவிடுமா என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. அதற்கான முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.


10 ஆம் வகுப்புக்கு  ஏப்ரல் 8-ந்தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 19-ந்தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதற்கட்டமாக 19-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது.


இதனைத்தொடர்ந்து புதிய தேர்வுக் கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி, 1 முதல் 9 ஆம் வகுப்புகள் வரை 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும். ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடை விடுமுறை, 11 நாட்கள் தள்ளிப்போகிறது.


தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கு முன்னதாக பள்ளித் தேர்வுகளை நடத்தி முடிக்க கல்வித் துறை தீவிரம் காட்டிவருகிறது . இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையருடன், கல்வித் துறை ஆலோசனை நடத்தி, ஆண்டு இறுதித் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது.


தமிழக அரசு பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள், வரும், 2ம் தேதி துவங்கி, 12ம் தேதி முடியும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகை, 10ம் வகுப்பு தேர்வு, தெலுங்கு, தமிழ் புத்தாண்டு விடுமுறை, தேர்தல் என, பல்வேறு காரணங்களால், இரு தேர்வுகள் மாற்றப்பட்டு உள்ளன.


பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்.,10ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் பாடத்தேர்வு, ஏப்., 22ல் நடக்கும்


ஏப்., 12ல் நடத்துவதாக குறிப்பிடப்பட்ட சமூக அறிவியல் தேர்வு, ஏப்., 23ல் நடத்தப்படும். இதன்படி தேர்வுகளை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பழைய அட்டவணைப்படி, ஏப்., 13 முதல் கோடை விடுமுறை துவங்கும் என்று கூறப்பட்டிருந்தது. தேர்வு அட்டவணை மாற்றத்தால், கோடை விடுமுறை, ஏப்., 13ல் துவங்குவதற்கு பதில், ஏப்., 24ம் தேதியில் துவங்க உள்ளது.


Post Top Ad