அரசு, தனியார் பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்களுக்கு, ஜன., மாதமே நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட, சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, அரசு, தனியார் பள்ளிகளில், 1 - 8ம் வகுப்புகளுக்கு, கற்பித்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இது, பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், டெட் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ளோருக்காக, சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என, 2025, அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், 2026ல், ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் சிறப்பு டெட் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் நடத்தப்படும். இதன் முடிவுகளுக்கு பின், மீதமுள்ள தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் எண்ணிக்கை அடிப்படையில், 2027ல் தேவைக்கேற்ப சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டிச., 3ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில், சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது. ஆனால், காரணம் தெரிவிக்காமல், அன்றைய தினமே, இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் நீக்கப்பட்டது.
இதனால், விரைவில் சிறப்பு 'டெட்' தேர்வு அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறுகையில், “அரசு, உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், இத்தேர்வை எதிர்கொள்ள, மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மாவட்ட, வட்டார வாரியாக, வார இறுதி நாட்களில் பணியிடை பயிற்சி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், எந்தவித பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படவில்லை. அரசாணையில் குறிப்பிட்டபடி, ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு நடத்தினால் தான், ஆசிரியர்களால் கற்பித்தல் பணிகளோடு, சுய தயாரிப்பு பயிற்சிகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும். இத்தேர்வை தள்ளி வைத்தால், பதவி உயர்வுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜனவரியில் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட சிறப்பு 'டெட்' தேர்வுக்கு, இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணியில் உள்ளோருக்கு, அனுபவம் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும்,” என்றார்.

No comments:
Post a Comment