1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை ரூபாய் 5000 வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் உரையாற்றுகையில் கூறியதாவது; அனைவருக்கும் வணக்கம். மிக முக்கியமான ஒரு பொருண்மை குறித்து இந்த காணொளி வெளியிடப்படுகிறது. இன்று காலை நமது அரசின் சார்பாக ரூபாய் 5,000 உங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகை எதற்காக வழங்கப்படுகிறது? நாம் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தது. அதனைச் சமாளித்து மக்களின் உயிரைக் காத்ததோடு மட்டுமல்லாமல், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூபாய் 4,000 நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஆட்சிக்கு வந்ததுமே பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன்; அப்போது இது சாத்தியமற்றது என்று சிலர் கூறினர். இருப்பினும் நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஒன்றிய அரசின் பாரபட்சத்தையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்.
தொடக்கத்தில் ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இத்திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இது வெறும் நிதி உதவி மட்டுமல்ல; சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் உரிமைத் தொகையாகும். இத்தொகையைக் கொண்டு அன்றாட இல்லச் செலவுகள், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் எனப் பல அத்தியாவசியத் தேவைகளை மகளிரே நிறைவு செய்ய இத்திட்டம் வழிவகுத்தது.
அதன் காரணமாகவே ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதியை அனைத்துக் குடும்பத் தலைவிகளும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக இது அமைந்துள்ளது. இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
நாம் இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த முனைந்து வரும் வேளையில், அதற்கு எதிராகத் டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிபணிந்து நடக்கும் மற்றொரு கூட்டமும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தச் சூழ்ச்சி செய்வதாகத் தகவல் கிடைத்துள்ளது.

No comments:
Post a Comment