'EMIS' பணிகளிலிருந்து முழுமையாக விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Asiriyar.Net

Thursday, January 23, 2025

'EMIS' பணிகளிலிருந்து முழுமையாக விடுவிக்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

 




'கல்வி மேலாண்மை தகவல் மையம்' எனும், 'எமிஸ்' இணையதளத்தில், பள்ளிகளில் உள்ள மாணவ - மாணவியர், ஆசிரியர், வருகை பதிவு உள்ளிட்ட அனைத்து விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.


இதில், 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில், தினமும் பதிவு மேற்கொள்ளும் பணி உள்ளதால், அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் பணியில் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் எமிஸ் பதிவு பணிகளை குறைக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.


தற்போது இப்பணிகளை வெகுவாக குறைத்து, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆசிரியர் பயிற்சி வருகை, கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள், அடல் ஆய்வகம் குறித்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.


தவிர நிதிப்பதிவு, நிறுவன பதிவு, பள்ளி நன்கொடை பதிவு, தகவல் தொடர்பு பதிவு, மனுக்கள், செயல்முறை பதிவு, உதவித்தொகை, மாணவர் ஊக்க பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாத அறிக்கை, பள்ளிகள் மின் கட்டண விபரம் உள்ளிட்டவற்றை நீக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


மேலும் நுாலக புத்தக வினியோகம், வாசிப்பு இயக்கம், கலை திருவிழா, விலையில்லா பொருட்கள், பாடப்புத்தகங்கள், பணியாளர் தரவு ஒருங்கிணைப்பு, இடைநிற்றல் கண்காணிப்பு, பள்ளி சார்ந்த விபரங்கள் ஆகிய தலைப்புகளில், பதிவு பணிகள் குறைக்கப்பட்டுள்ளன.


கூடுதல் சுமைகள் தளர்வு


பேணப்படும் ஆசிரியர் நிபுணத்துவ மேம்பாடு (TPD) பயிற்சியின் போது ஆசிரியர்களின் தரவு உள்ளீட்டை குறைப்பதற்காக, பயிற்சி வருகை. கருத்து மற்றும் வினாடி வினா தொகுதிகள் நீக்கம் செய்யப்படுகின்றன. ATAL ஆய்வகம் தொகுதி பதிவு EMIS லிருந்து அகற்றப்படும்.


நீக்குவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் சார்ந்த தொகுதிகள்: நிதிப் பதிவு. நிறுவனப் பதிவு, பள்ளி நன்கொடைப் பதிவு, தகவல் தொடர்புப் பதிவு, மனுக்கள் மற்றும் செயல்முறைப் பதிவு, உதவித்தொகை மற்றும் மாணவர் ஊக்கப் பதிவு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான மின் கட்டண விவரங்கள்.


நூலக புத்தக விநியோக விவரம்: நூலக புத்தகப் பதிவுகளில் யார் எந்தெந்த புத்தகங்கள் உள்ளனர் மற்றும் தற்போதைய புத்தக இருப்பு ஆகியவற்றை மட்டுமே பதிவேற்றம் செய்தல் போதுமானதாகும்.


வாசிப்பு இயக்கம்:


எண்ணும் எழுத்தும் திட்ட மாணவர் தரநிலை விவரங்களிலிருந்தே தரவுகளைப் பெற்று வாசிப்பு இயக்கப் பதிவுகளுக்கு மாற்றப்படும். வாசிப்பு இயக்கத்திற்கான தனியான பதிவு மேற்கொள்ள வேண்டியதில்லை.


கலைத் திருவிழா:


வெற்றியாளர் பட்டியல்களை மட்டுமே பதிவு செய்ய நெறிப்படுத்தப்பட்டுள்ளது. பங்கேற்றோர் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை.


விலையில்லா பொருட்கள் மற்றும் பாடப்புத்தகங்கள்:


பாடப்புத்தகங்களுக்கான Barcode அடிப்படையிலான கண்காணிப்பு, மாநில அளவில் இருந்து தலைமையாசிரியர்கள் வரை செயல்படுத்தப்படும். பெறப்பட்ட ஒட்டு மொத்தமாக விநியோகிக்கப்பட்ட, இருப்பு மற்றும் தேவைகள் ஆகிய விவரங்களை மட்டுமே பதிவிட்டால் போதுமானதாகும். மாணவர்கள் வாரியாக பதிவு செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.


குழுக்கள் மற்றும் மன்றங்கள்:


அனைத்து குழுக்கள் மற்றும் மன்றங்கள் சார்ந்த விவரங்களை தனித்தனியே பதிவிட வேண்டியதற்கு மாறாக இவை அனைத்தையும் House System என்ற அலகின்கீழ் கொண்டு வரப்படும். இதன் வாயிலாக தனித்தனியாக மன்றங்கள் சார்ந்த பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதில்லை.


இடைநிற்றல் (Dropout) கண்காணிப்பு:


15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களப் பற்றிய விவரம் மட்டுமே பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


கால அட்டவணை மேலாண்மை:


கால அட்டவணை சார்ந்த உள்ளீடுகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவு செய்தால் போதுமானதாகும்.

 

பள்ளி சார்ந்த விவரங்கள்:


பள்ளி சார்ந்த அனைத்து விவரங்களும் ஒருங்கமைக்கப்பட்டு ஒரே தொகுதியாக்கப்படுகிறது. எனவே. தனித்தனி விவரங்கள் பதிவிட வேண்டியதில்லை. இந்த நடவடிக்கைகள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் நிர்வாக தரவு உள்ளீடு சார்ந்த பணிச்சுமையை கணிசமாகக் குறைத்து, கற்பித்தல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், இந்த மாற்றங்கள் EMIS தரவு மேலாண்மை அமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வலுப்படுத்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் அனைத்தும் உடன் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ஆசிரியர் என்பவர், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க மட்டுமே. அந்த வேலை, இந்த வேலை என இடையூறு செய்தால், கற்பித்தல் பணியை நுாறு சதவீதம் மேற்கொள்ள முடியாது.


மாணவ, மாணவியர்தான் பாதிக்கப்படுவர். ஆகவே, சுதந்திரமாக பாடம் நடத்தும் வகையில், கூடுதல் பணிகளில் இருந்து, அரசு எங்களை விடுவிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad