பள்ளி ஆசிரியர் பணித் தகுதிக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் தங்களது தேர்ச்சி சான்றிதழை நாளை (பிப்.2) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுவோர் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த நவம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. 4.24 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட டெட் தேர்வில் தேர்ச்சி பெற, பொதுப் பிரிவினர் 60 சதவீதமும் (90 மதிப்பெண்), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீதமும் (82 மதிப்பெண்) எடுக்க வேண்டும். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவைப் பின்பற்றி, தமிழகத்திலும் சமீபத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு டெட் தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.
அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்கள்; எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் அருந்ததியினர் பிரிவினருக்கு, 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த அரசாணை, கடந்த மாதம் தான் வெளியிடப்பட்டது.
ஆனாலும், கடந்த ஆண்டில் நடத்தப் பட்ட டெட் தேர்வுகளுக்கும் இது பொருந்தும் என, தமிழக அரசு அறிவித்தது.
அதை அமல் படுத்தும் விதமாக, கடந்த 28ம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், 'டெட்' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, 'டெட்' முதல் தாள் தேர்வில், 45,469 பேர் தேர்ச்சி பெற்றனர்; 46,948 பேர் தோல்வி அடைந்தனர்.
அதாவது, தேர்வு எழுதியவர்களில், 49.2 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 'டெட்' இரண்டாம் தாள் தேர்வில், ஒரு லட்சத்து, 4,604 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2 லட்சத்து, 27,295 பேர் தோல்வியடைந்தனர். ஒருவரது தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை.
தேர்வு எழுதியவர்களில், 31.52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 69 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதற்கிடையே, 'டெட்' தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், அதற்கான தகுதிச் சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில், 02.02.2026 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டது. இதனால், தற்போது பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் கடந்த நவம்பரில் டெட் தேர்வு எழுதினர். அவர்களில் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஏராளமான ஆசிரியர்கள் ஓரிரு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதேநேரம், வினாத்தாளில் தவறாக இடம்பெற்ற சில கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அத்தகைய தவறான வினாக்களுக்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர திட்டத்தின்படி, இந்த ஆண்டில் 2 முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment