அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் இணைய வழியில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடந்து வந்தது. இதனால் வெளி ஊர்களில் இருந்து மாணாக்கர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப் போக்க முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, விண்ணப்பங்கள் 20.6.2025 முதல் 21.7.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன.
557 ஆண்கள், 2983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3545 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர் 31.7.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன. இணைய வழியில் 4ம் தேதி(நேற்று) பிற்பகல் 1 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 5 வரை மாணாக்கர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் உள்நுழைவு ஐடி மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment