TAPS திட்டத்துக்கு எதிர்ப்பு என்பது உண்மையா? - சங்கங்கள் விளக்கம் - Asiriyar.Net

Friday, February 6, 2026

TAPS திட்டத்துக்கு எதிர்ப்பு என்பது உண்மையா? - சங்கங்கள் விளக்கம்

 



தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான அறிவிப்பு போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ந்தேதி நன்றி அறிவிப்பு மாநாடு நடத்த இருப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த சங்க நிர்வாகிகள் அளித்த பேட்டியை பார்ப்போம்.


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 20 வருட கோரிக்கை ஓரளவு தற்போது நிறைவேறி உள்ளது. பழைய ஓய்வூதியம் அப்படியே நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், அதே வடிவில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் இருப்பதாக அரசு ஊழியர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.


மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் 6 மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் ஏற்கனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.


அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும். புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் அரசாணையில் உள்ளது. தமிழக அரசின் இந்த முடிவால் மகிழ்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து கடந்த மாதம் நன்றி தெரிவித்தனர்.


இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறுகையில், "தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான அறிவிப்பு போன்ற அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.


இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி கொண்டாடும் வகையில் நன்றி அறிவிப்பு மாநாட்டை ஜாக்டோ ஜியோ நடத்துகிறது. வரும் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை 4 மணிக்கு இந்த மாநாடு நடைபெறும். தமிழகத்திற்கு மத்திய அரசு உரிய நிதியை வழங்காத நிலையிலும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்காக ரூ.13 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். இந்த திட்டத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்.


எங்கள் கூட்டமைப்பில் உள்ள சங்கங்கள் இதை கொண்டாடுகின்றன. எங்களுக்கு ஒரு வாழ்க்கையையும், கௌரவத்தையும் தந்திருக்கும் திட்டம் இது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் (சி.பி.எஸ். திட்டம்). வாங்கியுள்ள செட்டில்மெண்ட் பணத்தைக்கூட திருப்பித் தந்துவிடுகிறோம், இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர வழிவகை உள்ளதா? என்று சங்கத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


அப்படியொரு நல்ல திட்டத்தை வேறு விதமாக சொல்லி, மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போர் புரளியையும், வதந்தியையும் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திவிட்டு இங்குள்ள குறைகளை கூறலாம். எங்கள் மேல் கரிசனம் இருந்தால் பிரதமரிடம் கூறி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அவர் அறிவிக்கட்டும். நாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு பிறகு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குழப்பங்கள் தீரும்" என்று கூறினார்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad