சின்னசேலம் அருகே மிட்டாய் என நினைத்து மாத்திரைகளை சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த சிறுமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி மகள் லத்திஷா, 6; இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் லத்திஷா, தனது வீட்டிலிருந்து மறதி நோய்க்கு சாப்பிடும் 15 மாத்திரைகள் கொண்டை அட்டை மற்றும் பெயர் தெரியாத 10 மாத்திரைகள் கொண்ட அட்டை ஆகியவற்றை தனது புத்தக பையில் வைத்து பள்ளிக்கு எடுத்து சென்றுள்ளார்.
பள்ளியில், தன்னுடன் பயிலும் சில மாணவிகள் மாத்திரை அட்டைகளை பார்த்துள்ளனர். அதனை மிட்டாய் என நினைத்து மாணவிகளான ரிஷகாதேவி, 6; இந்துஷா,6; விஷ்மிதா,7; ரஷ்மிதா,8; புஷ்பலதா,7; ஆகியோர் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர்.
பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற மாணவிகள் தங்களுக்கு மயக்கம் வருவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தைகளை மருத்துவமனைக்கு துாக்கி கொண்டு ஓடினர். ரிஷிகாதேவி, இந்துஷா ஆகிய இரு மாணவிகள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
விஷ்மிதா, ரஷ்மிதா, லத்திஷா, புஷ்பலதா ஆகிய 4 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் மற்றும் அவரது பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி, உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.

No comments:
Post a Comment