3வது ஊக்கத்தொகை கோர முடியாது: ஆசிரியர் வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, January 18, 2023

3வது ஊக்கத்தொகை கோர முடியாது: ஆசிரியர் வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு

 



உயர் கல்வித்தகுதி பெற்றுவிட்டோம் என்பதன் அடிப்படையில் பணிக்காலத்தில் 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் நகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் நிர்மலா. இவர் தனக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி மனுதாரர் நிர்மலாவுக்கு 3வது ஊக்கத்தொகை வழங்குமாறு கடந்த 2016ல் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தர்மபுரி தொடக்க கல்வி அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சாத்தி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் ஜி.நன்மாறன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2018ல் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு அளித்த உத்தரவில், அரசு கொள்கை விதிகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் 2 ஊக்கத்தொகை அதாவது 4 சம்பள உயர்வு மட்டுமே பெறமுடியும்.


எம்பில் படித்துள்ளார் என்பதற்காக 3வது ஊக்கத்தொகையை கோர முடியாது. கடந்த 1993ல் கல்வி, அறிவியல் மற்றும் தொழிநுட்ப துறை வௌியிட்டுள்ள அரசாணையில் ஊக்கதொகை சம்பள உயர்வு 2 முறை மட்டுமே என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற முழு அமர்வின் அடிப்படையில் ஆசிரியை 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வை கோர முடியாது என்பதால் அவருக்கு 3வது ஊக்கத்தொகை சம்பள உயர்வு வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.   


Post Top Ad