பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: RBI எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 18, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்: RBI எச்சரிக்கை

 



பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் முடிவெடுத்துள்ள நிலையில், இது மாநிலங்களின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவது குறித்த தங்கள் முடிவை ஏற்கெனவே தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு நவம்பரில் பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்தான அறிவிப்பை வெளியிட்டது. ஹிமாசல பிரதேச மாநில அரசும் இது குறித்தான முடிவை மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில், ரிசா்வ் வங்கி வெளியிட்ட மாநிலங்களின் 2022-23 நிதிநிலை குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதிநிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம், இயற்கை பேரிடா் உள்ளிட்டவற்றுக்கு மாநிலங்கள் ஒதுக்கீடு செய்யும் நிதியானது குறைந்துள்ளது.


கடன்களுக்கான வட்டி, நிா்வாக பணிகள் மற்றும் ஓய்வூதியங்களுக்காக பட்ஜெட்டின்போது நிதி ஒதுக்கீடு செய்வது ‘மாநிலங்களின் 2021-22 நிதிநிலை குறித்த அறிக்கை’யுடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.


தற்போதைய செலவுகளை எதிா்காலத்துக்குத் தள்ளிப்போடுவது, வரும் காலங்களில் மாநிலங்களின் வருவாய் இல்லாத ஓய்வூதிய செலவின பொறுப்புகளை அதிகரிக்கச் செய்யும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post Top Ad