பள்ளிகள் திறக்கும் முன்... பள்ளிக்கல்வி துறையின் உத்தரவு - Asiriyar.Net

Tuesday, May 28, 2024

பள்ளிகள் திறக்கும் முன்... பள்ளிக்கல்வி துறையின் உத்தரவு

 




தமிழகத்தில் ஜூன் 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்புக்கு முன்னரும், திறந்த பிறகும் செய்ய வேண்டிய கல்வி செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை, பள்ளிக்கல்வி துறை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விபரம்:



பள்ளிகள் திறக்கும் முன்...



பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்


மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைத்து, பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்


குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்


பாதுகாப்புக்காக

பள்ளி வளாகத்தில் மாணவர்களின் முழு பாதுகாப்பிற்கு, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முழு பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்


பழுதடைந்த கட்டடங்கள், உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் இருந்தால், அப்பகுதிகளுக்கு மாணவர்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்


வளாகத்தில் கட்டடங்களுக்கு இடையூறாக உள்ள கிளைகளை அகற்றி, மரங்கள் விழாத வகையில், இருப்பதை உறுதி செய்ய வேண்டும்



மாணவர் சேர்க்கை


ஜூன் 6ம் தேதியன்று, அனைத்து பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை கொண்டாட வேண்டும்


தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை; பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும், பள்ளியில் சேர்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்


பள்ளிகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப வாரத்தின் ஏதாவது ஒரு நாளில், கடைசி இரு பாட வேளைகளில், கல்வி இணை செயல்பாடுகளை திட்டமிடலாம்


வாரத்திற்கு இரண்டு பாடவேளை உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த நேரத்தில், உடற்பயிற்சி ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் விளையாட வைக்க வேண்டும்


வாரத்திற்கு ஒரு நாள் அனுபவ பகிர்வு அல்லது நீதி போதனை பாட வேளையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று, மாணவர்களின் மனநலன் சார்ந்து, தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad