குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு - Asiriyar.Net

Thursday, November 30, 2023

குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கம் அறிவிப்பு

 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மூன்றாண்டுகளாக எங்களது அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஒற்றைக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மறுநிமிடமே இவ்வியக்கம் கலைக்கப்படும் என்ற இலக்கோடு துவங்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


எங்களது இயக்கத்தின் சார்பாக திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம், மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம், கையெழுத்து இயக்கம், மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்ட அளவில் உண்ணாவிரதம், மண்டல அளவில் கருத்தரங்கம், மாநில அளவில் சென்னையில் உண்ணாவிரதம், பேரணி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கோரிக்கை மாநாடு மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பேரணி, ஒரு நாள் ஒட்டு மொத்தத் தற்செயல் விடுப்புப் போராட்டம், மாவட்டத் தலை நகரங்களில் 24 மணி நேர காத்திருப்புப் போராட்டம், சென்னை 72 மணி நேர உண்ணாவிரதம் என பல்வேறு தொடர் இயக்கங்களை CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக நடத்தியுள்ளோம்.


அதன் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் மாதம் திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளோம். அதில் முதல் இயக்கமாக எதிர்வரும் 02.12.2023(சனிக்கிழமை) அன்று CPS-யை இரத்து செய்ய வேண்டும் எனும் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் "குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டம்” நடத்திட திட்டமிட்டுள்ளோம்.


அனைத்து அரசுஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை என்ற அடிப்படையில் தாங்களும் தங்களது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் "குடும்ப உறுப்பினர்களுடன் பட்டினிப் போராட்டத்தில்” கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய தங்களின் மேலான ஒத்துழைப்பை நல்குமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.




Post Top Ad