TETOJAC - மாபெரும் ஆர்ப்பாட்டம் - தீர்மானகள் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, September 8, 2023

TETOJAC - மாபெரும் ஆர்ப்பாட்டம் - தீர்மானகள் அறிவிப்பு

 



டிட்டோ-ஜாக் சார்பில் 11.9.2023 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) 07.09.2023


தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோ-ஜாக் பேரமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் காணொளி வாயிலாக இன்று (07.09.2023) வியாழன் மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திரு.கோ.காமராஜ் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம்: 1


எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூண்றாம்நபர் ஆய்வின் போது பி.எட். பயிற்சி மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற SCERT இயக்குநரின் சுற்றறிக்கைக்கு டிட்டோ-ஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள இயக்கங்களின் தலைவர்கள் கடும் எதிர்ப்பினைப் பதிவு செய்த நிலையில் மதிப்புமிகு.


பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் டிட்டோ-ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்து மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் மூன்றாம்நபர் ஆய்வில் பி.எட். பயிற்சி மாணவர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்று மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உறுதி அளித்தார்.


ஆனால் அவர் அளித்த உறுதிக்கு மாறாக இன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் நடைபெற்ற மூன்றாம் நபர் மதிப்பீட்டில் முழுக்க பி.எட். பயிற்சி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. 


பல பள்ளிகளில் பி.எட். பயிற்சி மாணவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளனர். பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக SCERT தணிச்சையாக செயல்படுவதற்கு டிட்டோஜாக் பேரமைப்பு கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறது. 


தீர்மானம்: 2


28.09.2023 அன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2ல் "எண்ணும் எழுத்தும் திட்டத்தை பி.எட் படிக்கும் மாணவர்களைக் கொண்டு ஆய்வுச் செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது. 


எக்காரணம் கொண்டும் எந்த வடிவத்திலும் கல்வித்துறை சார்ந்த மூன்றாம்நபர் ஆய்விற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பதையும், அவர்களை பள்ளியில் அனுமதிக்க வாய்ப்பில்லை என்பதையும் டிட்டோஜாக் ஒருமனதாக முடிவெடுத்து அறிவிக்கிறது" எனத் தெரிவித்திருந்தோம். பி.எட் பயிற்சி மாணவர்களை ஆய்விற்கு பயன்படுத்துவது தொடர்ந்தால் ஆய்வுக்கு அனுமதிப்பதில்லை என்ற டிட்டோஜாக் முடிவினை உறுதிப்படச் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.


தீர்மானம் : 3


11.09.2023 திங்கள் மாலை மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதிக்கு மாறாக பி.எட். பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுமதிப்பதைக் கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும், ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தினை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுவதும் கைவிட வலியுறுத்தியும், தொடக்கக் கல்வித்துறையில் 1 முதல் 8 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பித்தல் பணியில் ஈடுபட இயலாத வகையில் EMIS செயலியில் பல்வேறு பதிவேற்றங்களை செய்யும் பணியினை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 


கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட இயலாத காரணத்தால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கல்விப் பணியைத் தவிர பிற பணிகளில் குறிப்பாக EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவித்திட வலியுறுத்தியும், CRC பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. 


எனவே, பயிற்சி ஏதுவாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வலியுறுத்தியும், பள்ளி மேலாண்மைக்குழு ஒவ்வொரு மாதமும் கூட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்படி கூட்டங்களைக் கூட்ட வலியுறுத்தியும், விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிப்பதைக் கைவிட வலியுறுத்தியும், மாலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ➤ 11.09.2023 நடத்துவது டிட்டோஜாக் பேரமைப்பு ஒருங்கிணைந்து முடிவு செய்து என அறிவிக்கிறது.


இவண்

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்







Post Top Ad