மீஞ்சூர் அடுத்த தத்தமஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 60 பள்ளி சிறுவர், சிறுமிகள் படித்து வருகின்றனர்.அங்குள்ள லட்சுமி அம்மன் கோயில் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த குழந்தைகள் 19 பேர் ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை கல்வி கற்கின்றனர்.
இந்த பழங்குடியின குழந்தைகளை பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி புறக்கணிப்பதாக புகார் எழுந்தது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
இதுபற்றி பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், நவம்பர் 29ம் தேதி மற்றும் டிசம்பர் 2ம் தேதி நேரடியாக பள்ளிக்கு சென்று, விசாரணை நடத்தி, திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அறிக்கை அளித்தார். கடந்த 5ம் தேதி பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, விசாரணைக்கு பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி வரவில்லை. மற்ற ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்தனர். இந்நிலையில், கல்வித்துறை நேற்று முன்தினம் தத்தமஞ்சி அரசு பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணியை பழவேற்காடு பகுதி கோரைக்குப்பம் அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்து, அதிரடியாக உத்தரவிட்டது. அங்கு பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியை ரேவதி, தத்தைமஞ்சி பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment