பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர் கலந்தாய்வு நடத்துவது வேதனை அளிப்பதாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் சங்க மாநில தலைவரான ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் தியாகராஜன் பங்கேற்றார்.
அவர் கூறியதாவது: முதல்வர் விஜயின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்கள் உறுதியளித்த ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது குறித்து கமிட்டி போட்டு நேரத்தை வீணடிக்க கூடாது. பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்துவது வேதனை தருகிறது.
தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் எனக் கூறியதன் அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும். தொடர்ந்து நிதி இல்லை என்ற காரணம் கூறப்பட்டு எங்களது கோரிக்கைகள் தள்ளிப் போகிறது. தற்போதும் அதே அதிகாரிகள் தான் உள்ளனர்.
ஆட்சியாளர்கள் மட்டும் தான் மாறி உள்ளார்கள். தற்போது டாஸ்மாக்கில் இருந்து 1200 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் வந்ததாக கூறுகிறார்கள்.
இதன்படி பார்த்தால் எங்களுக்கும் ஆறு மாதத்தில் அனைத்து பலன்களும் கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

No comments:
Post a Comment