தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 3 இடங்களில் நடைபெறுகிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, இந்திய அரசின் அறிவிப்பானது 16.6.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு, அது 16.7.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்திய தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை நடத்த இருக்கிறது.
இந்த முன்-சோதனையானது, 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்க்கு முன்மொழியப்பட்ட கருத்துகள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெற உள்ளது. 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.
இந்த முன்-சோதனையின் முடிவுகள், 2027 ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்க இருக்கும் செயல்பாட்டு சவால்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும். முதன்முறையாக, முன்-சோதனையின்போது, மொபைல் செயலிகளை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 10.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெற உள்ளது, இதனுடன் 1.11.2025 முதல் 7.11.2025 வரை சுய-கணக்கெடுப்பு செய்வதற்கான முன்-சோதனையும் நடைபெற உள்ளது.
முன்-சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:
* கிராமப்புற பகுதி - அஞ்செட்டி தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்
* கிராமப்புற பகுதி - ஆர்.கே. பெட் தாலுகாவின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டம்
* நகர்ப்புற பகுதி - மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம், முன்-சோதனை சுமுகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும். மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment