அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க...ப்ளீஸ்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 10, 2021

அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க...ப்ளீஸ்! தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

 





தேர்தலுக்கு முன் அழகாக காட்சியளிக்கும் பல பள்ளிகளின் சுவர்கள், தேர்தலுக்கு பிறகு, அசுத்தமடைவதால், வாக்குச்சாவடி மையங்களில், டிஜிட்டல் போர்டு வைக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், வரும் 6ம் தேதி நடக்கிறது.


ஆளும், எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பிற கட்சிகளும், கூட்டணி அமைத்து, வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றன. பொதுக்கூட்டங்களால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.



தேர்தல் ஆணையம் சார்பில், வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல், தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு, பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட, ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில், ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்படவுள்ள பள்ளிகள், தேர்தலுக்கு முன், பின் என்ற இருவேறு கோணங்களில் சந்திக்கவுள்ள மாற்றங்கள் குறித்து, ஆசிரியர்கள் பல்வேறு கருத்துகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



குறிப்பாக, ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.


தேர்தலுக்கு முந்தைய தினம், இரவு இப்பணிகள் நடப்பதால், வகுப்பறை உள்ளே, வெளியே என, எங்கு பார்த்தாலும், நோட்டீஸ்மயமாகவே காட்சியளிக்கும்.தேர்தலுக்கு பின், இதை நீக்கும் போது, சுவர்கள் அசுத்தமாவதோடு, பெயின்ட், பாடத்திட்டம் சார்ந்த படங்கள், எழுத்துக்களும் அழிந்து விடுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இச்சுவர்களை மீண்டும் அழகாக்க, உரிய ஆசிரியர்களே மெனக்கெட வேண்டியிருக்கும் எனவும், ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.பல கோடி ரூபாய் தேர்தல் பணிகளுக்காக, செலவிடும் தேர்தல் ஆணையம், இச்சிக்கலுக்கு மாற்றுத்தீர்வு காண வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.



ராக்கிப்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை கோமதி கூறுகையில், ''எங்கள் பள்ளி முழுக்க, மாணவர்களை கவரும் வகையில், பாடத்திட்ட கருத்துகளை வரைந்து, வண்ணமயமாக்கி உள்ளோம். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், வகுப்பறை சுவர்கள் பெயின்ட் உரிந்த நிலையில், அசுத்தமாகி விடுகின்றன. இதை புதுப்பிக்க, மீண்டும் செலவு செய்வது வாடிக்கையாகி விட்டது.



இதற்கு பதிலாக, டிஜிட்டல் போர்டு வைக்க தேர்தல் ஆணையம் முன்வரலாம். ஒருமுறை இதை கொள்முதல் செய்தால், அடுத்தடுத்த தேர்தல் பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.அரசுப்பள்ளிகளின் மீது நிஜமான அக்கறை கொண்ட, மாவட்ட தேர்தல் ஆணையரான நமது கலெக்டர், இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிக்கலாமே! ஓட்டுச்சாவடி மையமாக உள்ள பள்ளியில், வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய நோட்டீஸ், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொடர்பு எண், வாக்களிப்பதன் முக்கியத்துவம் அடங்கிய விழிப்புணர்வு வாசகங்கள் என கிட்டத்தட்ட, 30க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள், பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்படுவது வழக்கம்.


Post Top Ad