உடல் நிலை -  தேர்தல் பணியில் விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு - Asiriyar.Net

Thursday, April 9, 2026

உடல் நிலை -  தேர்தல் பணியில் விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு





கோவை மாவட்டத்தில், மருத்துவ காரணம் மற்றும் குடும்ப சூழலை காரணம் காட்டி, 1,980 ஊழியர்கள் தேர்தல் பணியில் விலக்கு கோரினர். 


அவற்றை பரிசீலித்ததில், 521 ஊழியர்களுக்கு மட்டும் தேர்தல் பணியில் விலக்கு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டத்தில், 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. 17,102 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் தபால் ஓட்டு அளிக்கும் வகையில், 12டி படிவம் வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடியில் எவ்வாறு பணிபுரிய வேண்டுமென முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. 3,000 ஊழியர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர். 

அதில், 1,980 ஊழியர்கள் உடல் நிலை, குடும்ப சூழல் காரணமாக, தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரி, கடிதம் கொடுத்தனர். டி.ஆர்.ஓ., வித்யா தலைமையிலான குழுவினர் அவற்றை பரிசீலித்தனர். உயரதிகாரிகள் மூலமாக சிலர் 'ரெக்கமெண்டேஷன்' செய்ததால், தேர்தல் பிரிவினர் டென்ஷன் ஆகினர். மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமார் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது.


அரசு வேலை செய்கிறார்கள்; சம்பளம் வாங்குகிறார்கள்; தேர்தல் வேலை மட்டும் செய்ய மாட்டார்களா என்கிற விவாதம் எழுந்தது. அதனால், உண்மையான மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம் என்றார். 

அதனால் ஒவ்வொரு கோரிக்கை மனுவும் பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக, 521 பேருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக பதிலி ஊழியர்கள் தேர்வு செய்து, பயிற்சி அளிக்கப்பட்டது. 

மற்றவர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டுமென கண்டிப்பாக உத்தரவிடப்பட்டது. டி.ஆர்.ஓ., வித்யா கூறுகையில், ''தேர்தல் பணியில் விலக்கு கோரி, 1,980 பேர் கடிதம் கொடுத்தனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. 

கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்திருப்போர், பாலுாட்டும் தாய்மார்கள், புற்றுநோய் பாதிப்பில் 3ம் கட்டத்தில் இருப்போர், ஹீமோதெரபி செய்வோருக்கு விலக்கு கொடுத்திருக்கிறோம். பதிலி ஊழியர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விட்டோம். 15ம் தேதி 2ம் கட்ட பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.





No comments:

Post a Comment

Post Top Ad