பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை அவரது கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஸ்ரீவித்யா (44). இவரை இன்று ஒருவர் பள்ளிக்குள் புகுந்து தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டி கொலை செய்து உள்ளார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பயந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது அங்கிருந்து அவர் தப்பி ஓடியள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் மற்றும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியை ஸ்ரீவித்யாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற விஜயமுருகன் (42) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் அசோகசிவசுந்தரி என்ற பெண் குழந்தை உள்ளது. விஜய முருகன் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
தப்பி ஓடிய கணவர்
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மனைவி ஸ்ரீவித்யாவை சந்தேகப்பட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாகவும், சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு சென்று விட்டதாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீசில் ஏற்கனவே புகார் அளித்து இருந்தது தெரியவந்தது.
தற்போது கணவரை பிரிந்து ஒரு மாதமாக ஓமலூர் பகுதியில் குடியிருந்து கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓமலூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து பள்ளி ஆசிரியை வெட்டிக்கொன்ற சம்பவம் இங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment