தமிழகத்தில் கல்வியாண்டு இடையே ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் பணியாற்றிய 600க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு திடீர் சம்பளப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஓய்வுபெறும் நிலையில் மாணவர்கள் நலன் கருதி கல்வியாண்டு இறுதிநாள் வரை (மே 31) அவர்கள் பணியாற்றும் வகையில், பணிநீட்டிப்பு உத்தரவு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் 2024-2025ல் 'கல்வியாண்டு இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர், தலைமையாசிரியர்கள் பள்ளி கடைசி வேலைநாளில் பணி விடுவிப்பு செய்ய வேண்டும்' என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி கடந்தாண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மட்டும் கடைசி வேலை நாளில் பணிவிடுவிப்பு செய்யப்பட்டனர். ஆனால் 'இந்தாண்டு தலைமையாசிரியர்களுக்கும் அந்த உத்தரவு பொருந்தும்' என அவர்களையும் கடைசி வேலை நாளான ஏப்., 25ல் பணி விடுவிப்பு செய்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் மாநில அளவில் 600க்கும் மேற்பட்ட அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் கடைசி வேலைநாளில் திடீரென விடுவிக்கப்பட்டனர். அவர்கள் பணியாற்றிய பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு இம்மாதம் தயாரிக்கப்பட்ட சம்பள பில்களில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் கையெழுத்திடவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் சம்பள பில்லை, கருவூலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் அன்பரசன் கூறியதாவது:
மாதந்தோறும் 20 ம் தேதிக்கு மேல் தான் ஆசிரியர்களுக்கான சம்பள பில் தயாரித்து, தலைமையாசிரியர்கள் கையெழுத்திட்டு கருவூலங்களில் சமர்ப்பிக்கப்படும். 'ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்களை பள்ளி இறுதி வேலைநாளில் பணிவிடுப்பு செய்யக் கூடாது. அவர்களை கல்வியாண்டு இறுதி வரை நீட்டிக்க வேண்டும்' என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்தாண்டு சட்டசபை தேர்தல் பணிகளிலும் ஆசிரியர், அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் பில்களை பெரும்பாலான பள்ளிகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. திடீரென கடைசி வேலைநாளான ஏப்., 25ல் தலைமையாசிரியர்களை பணிவிடுப்பு செய்ததால் இப்பிரச்னை எழுந்துள்ளது. ஆசிரியர்களின் சம்பளம் பாதிக்காத வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment