ஒரே நேரத்தில் விடைத்தாள் மதிப்பீடு, தேர்தல் பணி - பணிச்சுமை என ஆசிரியர்கள் புகார் - Asiriyar.Net

Monday, April 13, 2026

ஒரே நேரத்தில் விடைத்தாள் மதிப்பீடு, தேர்தல் பணி - பணிச்சுமை என ஆசிரியர்கள் புகார்

பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஊதியம் வழங்குவதில் உள்ள வேறுபாடுகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித் தேர்வுத்துறைக்கு தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ கோரிக்கை விடுத்துள்ளார். 

மாநிலப் பொதுச் செயலர் இளங்கோ கூறியதாவது: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியும் நடைபெற்று வருகிறது.


பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு ஆசிரியருக்கு ஒரு நாளைக்கு 24 விடைத்தாள் மதிப்பீடு செய்ய வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஒரு ஆசிரியருக்கு ஒரு நாளைக்கு 30 விடைத்தாள் மதிப்பீடு செய்ய வழங்கப்படுகிறது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அறிவியல் பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும், தமிழ் மொழிப் பாடம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் 90 மதிப்பெண்களுக்கு மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படுகிறது. மீதி 10 மதிப்பெண்கள் அந்தந்த பாடங்களின் அகத் தேர்வு மூலம் அகமதிப்பெண் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. 

ஆனால் பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் 100 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. அறிவியல் பாடம் மட்டும் 75 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரு விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு 8 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 

ஆனால் பிளஸ் 2 வில் ஒரு விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு ரூ.10 வழங்கப்படுகிறது. ஒரே விதமான மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளன. இந்த வேறுபாடு நிலையை நீக்க பள்ளி கல்வித் தேர்வுத் துறை முன்வரவேண்டும். பத்தாம் வகுப்பில் விடைத்தாள் எண்ணிக்கையை குறைத்தும் மதிப்பு ஊதியத்தை உயர்த்தியும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad