அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்ததால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 7 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்தும் ஒரு ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் மாவட்ட கல்வி அலுவலகத்தின் வளாகத்தில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி மற்ற அரசு பள்ளிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என எண்ணிய அரசாங்கம் இப்பள்ளிக்கு ஒரு பாடத்திட்டத்திற்கு இரண்டு நிரந்தர ஆசிரியர்கள், மேம்படுத்தப்பட்ட கல்வி வளாகம், கல்வி செலவுகளுக்கு தேவையான நிதி என அனைத்தையும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டில் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அன்றைய கலெக்டர் ரம்யா அவர்களது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். “இது மாதிரி பள்ளி இல்லை. மோசமாக உள்ளது மாணவர்களின் வகுப்பறை ஒழுக்கம், மாணவர்களின் கற்றல் திறன், பள்ளியின் வளாக தூய்மை, பெஞ்சுகள் நாற்காலிகள் என எதுவும் சரியில்லை” என கூறி இவற்றை எல்லாம் உடனே சரிசெய்ய சொல்லி எச்சரித்து சென்றிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டின் 12 - வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி மாவட்ட அதிகாரிகள் மற்றும் அறந்தாங்கி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தம் 166 மாணவர்கள் அப்பள்ளியில் 12 வகுப்பு படித்து வந்த நிலையில் 59 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்து மற்ற 107 மாணவர்களும் தேர்ச்சி அடையாமல் இருந்துள்ளனர். அதாவது 35% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன் இப்பள்ளியில் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு வேலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர்ந்த இடங்களில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டின் தேர்ச்சி விகிதத்தால் அதிர்ச்சியடைந்த ஊர்மக்களும் மற்றும் முன்னாள் மாணவர்களும் இந்த பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும் நிர்வாகத்தையும் முற்றிலும் மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனை அறிந்து விசாரணை நடத்திய பள்ளி கல்வி துறை அப்பள்ளியில் பணியில் இருந்த ஏழு ஆசிரியர்களை இடமாற்றம் மற்றும் ஒரு உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அப்பள்ளியில் காலி பணியிடங்களில் ஆசிரியர்களை பதவியில் அமர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அரசின் இந்த உத்தரவு அறந்தாங்கி பொது மக்களால் வரவேற்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து இனியாவது இப்பள்ளிக்கு ஒரு எழுச்சி கிடைக்கும் மீண்டும் பழைய நிலையில் பள்ளி செயல்படும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment