அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்க 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும்.
மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ’வாட்டர் பெல்’ திட்டத்தை அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த போதிய அளவு தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டர் பெல் அடித்து தண்ணீர் குடிக்க வைக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் இதற்காக வகுப்பறைகளை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லாமல், இருக்கும் இடத்தில் தண்ணீர் குடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment