உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தில் மது அருந்திய ஆசாமிகளை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மடத்துக்குளம் தாலுக்கா காரத்தொழுவு கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். உடுமலை, யு.எஸ்.எஸ் லே அவுட் பகுதியில் வசிப்பவர் செய்யது முகமது குலாம் தஸ்தகீர் (46) இவர் காரத்தொழுவு அரசு பள்ளியில் இரண்டாம் நிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மாலை சுமார் 6 மணியளவில் பள்ளி அருகே உள்ள குடியிருப்பில் இறந்தவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த நபர்களில் அடையாளம் தெரியாத நான்கு பேர் பள்ளி வளாகத்தில் மது அருந்தியுள்ளனர்.
இதனைக் கண்ட ஆசிரியர் இங்கே குடிக்க கூடாது என எச்சரித்துள்ளார் .
மது போதையில் இருந்த ஆசாமிகள் ஆசிரியரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். பின் ஆசிரியர் அங்கிருந்து சென்று ஸ்பெசல் கிளாஸ் மாணவர்களுக்கு பாடம் நடத்த சென்றுவிட்டார்.
அப்போது பள்ளி வளாகத்துக்குள் வந்த மர்ம நபர்கள் ஆசிரியர் மீது ஏற்கெனவே பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர்.
இதனால் ஆசிரியர் சத்தம் போட்டுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்ததால் மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கணியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment