2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அன்பில் மகேஸ் முக்கிய தகவல்! - Asiriyar.Net

Tuesday, June 24, 2025

2,346 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எப்போது? அன்பில் மகேஸ் முக்கிய தகவல்!

 



தொடக்கக் கல்வித் துறையில், ஜூன் 20 வரையில் 3,35,428 புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது


தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாதம் இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி தலைமையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கூட்ட அரங்கில் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. முதலில் இந்த, 12 மாவட்ட அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 157 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.


கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “நடப்புக் கல்வியாண்டு துவங்கிய நாளன்றே பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரித்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள்.


தேர்ச்சி விகிதம் குறைந்த மாவட்டங்களில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தேர்ச்சி விகிதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரிந்து, பணியிலிருக்கும் போதே இறந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.


இது குறித்து பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது, துரிதமாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை அனுப்பி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தொடக்கக் கல்வித் துறையில், ஜூன் 20 வரையில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 428 புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஜூலை மாதம் இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்திட நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை துரிதமாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.


தொடர்ந்து, நாளை (ஜூன் 24) தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர். ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்ட அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad