உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு ஆரம்ப பள்ளியில் 23 ஆசிரியர்கள் பள்ளிக்கே வராமல் இருந்ததும், அதில் 12 ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பள்ளியில் இல்லாமல் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ பகுதியில் உள்ள மோகன்லால்கஞ்ச் எனும் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்காக அந்தப் பள்ளியில் மொத்தம் 29 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பள்ளிக்கு, அப்பகுதி கல்வி அலுவலர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அப்போது, அந்தப் பள்ளியில் மொத்தமே வெறும் ஆறு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர்.
29 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், ஆறு ஆசிரியர்கள் மட்டுமே இருக்க, மீதம் இருக்க வேண்டிய 26 ஆசிரியர்கள் எங்கே என விசாரிக்க தலைமை ஆசிரியரை தேடியபோது, அவருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அவர் ஆய்வுக்கு சென்ற இரு தினங்கள் முன்பிருந்தே அப்பள்ளி தலைமை ஆசிரியர் விடுமுறையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், அவர் தனது மேல் அதிகாரியிடம் எந்தவித முறையான தகவலும் சொல்லாமல் தன் இஷ்டத்திற்கு விடுமுறையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
26 ஆசிரியர்கள் குறித்து விசாரித்தபோது, அதில் 12 ஆசிரியர்கள் பள்ளியின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டுவிட்டு பள்ளியில் இல்லாமல் இருந்ததும், மற்ற ஆசிரியர்கள் எந்தவித முன் அறிவிப்பும், ஒப்புதலும் இல்லாமலும் விடுமுறையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனை அறிந்தவுடன் கல்வி அலுவலர் உடனடியாக மூன்று ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்தும், 20 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸும் அனுப்பியுள்ளார். மேலும், விடுமுறையில் இருந்த அனைத்து ஆசிரியர்களின் ஊதியத்தையும் உடனடியாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment