11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. தேர்வில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அதே போல் நேற்று முன்தினம் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட உள்ளன.