சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த நித்யா என்பவர் ஆங்கில பாட பிரிவிற்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், தமிழ் பாடப்பிரிவில் பி.எட் படிப்பை முடித்த பிறகு பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். மேலும், தொலைதூர கல்வி முறையின் கீழ் படித்துள்ள நிலையில், மனுதாரர் பதவி உயர்வுக்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம், ஏற்கனவே பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல. தமிழகத்தில் கல்விக்கு 36 ஆயிரத்து 895 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியர்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.
நீதிமன்றத்தின் அழைப்பை ஏற்று நேரில் ஆஜரான தமிழகதொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி தாக்கல் செய்த அறிக்கையில், கல்வி நிறுவனங்களில் நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான திட்டத்தை மூன்று மாதங்களில் பள்ளி கல்வி துறை மற்றும் உயர் கல்வி துறை செயலாளர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment