மாணவர் சேர்க்கை - ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தல் - Asiriyar.Net

Sunday, May 12, 2024

மாணவர் சேர்க்கை - ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்

 




கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.


பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்கள் விரும்பும் பாடத்தின் மீதான ஆர்வத்தை பொறுத்து உள்ளது.


என்ஜினீயரிங் அல்லது மருத்துவப் படிப்புகளை விரும்புவோர் முதல் குரூப், மருத்துவம் சார்ந்த படிப்புகளை விரும்புவோர் அறிவியல் குரூப், வங்கி, சி.ஏ., ஆடிட்டர், கம்பெணி மேலாளர் படிப்புகளை விரும்புவோர் 3-வது குரூப்பில் சேர ஆர்வமாக உள்ளனர்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.


தற்போது கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை நடைபெற உள்ளது.


இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் 35 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படும். அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


மார்க் அடிப்படையில் மாணவர்களுக்கு குரூப் ஒதுக்கப்படும். வெளியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.


பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தான் மாநகராட்சி பள்ளிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் சேருவதற்கு கடுமையான போட்டியும் உள்ளது என்றார்.



Post Top Ad