புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 25, 2023

புதிய ஓய்வூதிய திட்டம் : மேம்படுத்த குழு அமைக்க அரசு முடிவு

 



புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த, நிதிச் செயலரின் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்துள்ளார்.


கடந்த 2004ல் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ., அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் மத்திய அரசில் சேர்ந்த ஊழியர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.


புதிய மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடாக இருப்பது, பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையின் அளவாகும். பழைய திட்டத்தின்படி, ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது பெறும் ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாகக் கிடைக்கும்.


இதற்காக ஊழியர்களின் பணிக் காலத்தில் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படும். இதனால் அவர்களுக்கு கூடுதலான ஓய்வூதியம் கிடைக்கும்.


மேலும், பழைய திட்டம் மூலம் நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், புதிய முறையில் அப்படி இல்லை.


இதனால், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


குறிப்பாக, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பழைய முறையையே தொடர விரும்புவதற்கான முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.


இந்நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த புதிய அணுகுமுறை உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


லோக்சபாவில், நேற்று 2023ம் ஆண்டுக்கான நிதி மசோதாவை தாக்கல் செய்த அவர் கூறியதாவது:


அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்க்கவும், நிதி கட்டுப்பாட்டை காக்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, நிதித் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.


மத்திய - மாநில அரசு ஊழியர்களின் நலன் கருதி, புதிய ஓய்வூதிய அணுகுமுறை உருவாக்கப்படும். இந்த அணுகுமுறை அவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Post Top Ad