கலைஞர் வீடு திட்டம் - 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு - Asiriyar.Net

Friday, March 1, 2024

கலைஞர் வீடு திட்டம் - 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் - தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

 



சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார். இன்றைய பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து அறிவித்தார்.


இதுபற்றி அவர் கூறுகையில், நாட்டில் முதல் முறையாக ஊரகபகுதிகளில் ஏழை குடும்பங்கள் வசிக்கும் குடிசைக்கு பதிலாக நிரந்தர வீடுகள் காட்டித் தரப்படும் திட்டம் கடந்த 1975-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் இலக்கை அடைந்திடும் வகையில் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவரும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளில் அமைத்துத் தரும் நோக்கத்துடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கிராம பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. குடிசை இல்லா தமிழ்நாடு என்ற  இலக்கு அடைந்திடும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகபகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தெரிவித்தார்.


முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டு மனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டுவதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் வாய்ப்பு என  குறிப்பிடத்தக்க அம்சங்களை தாங்கி புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறினார்


Post Top Ad