ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது! - Asiriyar.Net

Wednesday, April 21, 2021

ஆசிரியர்களுக்கு கொரோனா பரவுகிறது!

 



தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, சட்டசபை தேர்தலுக்கு பிறகே, அதிகளவில் பரவ துவங்கியுள்ளது. குறிப்பாக, பயிற்சியில் பங்கேற்றோர், தேர்தல் முடிந்ததும், அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாவது தெரியவந்துள்ளது.



மாணவர்களே பள்ளிக்கு வராத நிலையில், ஆசிரியர்கள் மட்டும் தினசரி வருகை புரிவதோடு, கூட்டமாக அமர்வதாலும், தொற்று வேகமாக பரவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.ஒன்பது முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டபோது, ஆன்லைன் வகுப்புகள் தொடர வேண்டுமென உத்தரவிடப்பட்டது.



ஆனால், தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 2 தேர்வு தள்ளி வைக்கப்பட்ட போதும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்வதா என்பது குறித்த, தெளிவான விளக்கம் இல்லாததால், எப்போது கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என்ற, கேள்வி எழுந்துள்ளது.



தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம் கூறுகையில்,'' தேர்தலுக்கு பிறகு, ஆசிரியர்கள் அதிகளவில் தொற்று ஆளாகி வருகின்றனர். தினசரி 'ஆப்சென்ட்' பட்டியல் இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுகிறது. இதில், தொற்றுக்கு ஆளான ஆசிரியர்களின் விபரங்களும் உள்ளன. 



இருப்பினும் எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காமல், கல்வித்துறை மவுனம் காக்கிறது.கற்பித்தல் செயல்பாடுகளே இல்லாத நிலையில், ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டிய அவசியமில்லை. இதன் காரணமாகவும் தொற்று பரவுவதால், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். விரைவில், இதுசார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என்றார்.










No comments:

Post a Comment

Post Top Ad