பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை - Asiriyar.Net

Friday, April 23, 2021

பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை

 







'அரசிடம் இருந்து உத்தரவு வரும் வரை, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை இப்போது நடத்தக்கூடாது,'' என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக, பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. இவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்த, தெளிவான வழிகாட்டுதல், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்படவில்லை.



இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி அளவில் பொதுத்தேர்வு எழுதலாம் என சமீபத்தில், சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால், இது உண்மையல்ல என, இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.எனவே, பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடுவது, பிளஸ் 1 சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை பற்றிய, எந்த அறிவிப்பும் இல்லை.



அட்மிஷன் கேட்டு வருபவர்களுக்கு, இவர்களிடம் பதில் இல்லை. ஆனால், பல தனியார் பள்ளிகள், தங்களிடம் படித்த மாணவர்களுக்கே, பிளஸ் 1 அட்மிஷன் தர மறுப்பதாகவும், உடனே பணம் செலுத்தினால் மட்டுமே, பாடப்பிரிவுகள் வழங்க முடியும் எனவும், பெற்றோருக்கு நெருக்கடி தருவதாக, புகார் எழுந்துள்ளது. கோவை மட்டுமல்லாமல், மாநிலம் முழுக்க, இதே நிலையே உள்ளது.



தொற்று வேகமாக பரவும் தற்போதைய சூழலில், வருமானம் குறைந்து வருவதால் பெற்றோர் செய்வதறியாது தவிக்கின்றனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது,


''கல்வித்துறையின் உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. பிளஸ் 1 சேர்க்கை தற்போது நடத்த கூடாது. இது குறித்து, சுற்றறிக்கை வாயிலாக, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டபோது, ''இது தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.




No comments:

Post a Comment

Post Top Ad