தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை - Asiriyar.Net

Thursday, April 22, 2021

தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை – ஆசிரியர்கள் கோரிக்கை

 







தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நாளை (ஏப்ரல் 23) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என மாநில அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கொரோனா பரவலின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னதாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்ப பயிலகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வந்தன.



இதை தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை எடுக்கவும், மாணவர் சேர்க்கை போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர். 




இந்நிலையில் தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கையில், ‘மாணவர்களுக்கு பாடங்கள் எடுக்க வேண்டியதில்லை என்பதால் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் வேலை இல்லை. என்றாலும் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். 



எனவே ஆசிரியர்கள் நலன் கருதி ஏப்ரல் 23ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்க அரசு நடவடிக்கை வேண்டும். மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போன்ற பணிகளுக்கு ஆசிரியர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளனர்.







No comments:

Post a Comment

Post Top Ad