பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, January 14, 2026

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

 



* பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு


* இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என பேச்சுவார்த்தைக்கு பின் அமைச்சர் உறுதி


பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.12,500-ல் இருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்படுவதாகவும், மே மாதத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களில் உடற்கல்வி 3700 பேர், ஓவியம் 3700 பேர், கணினி அறிவியல் 2 ஆயிரம் பேர், தையல் 1700 பேர், இசை 300, தோட்டக்கலை 20, கட்டிடக்கலை 60, வாழ்க்கைக்கல்வி 200 பேர் பணிபுரிகின்றார்கள்.


இவர்கள், போனஸ், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறத்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வூதியம் உள்பட அரசின் சலுகைகள் இல்லாமல் பணிபுரிகின்ற தற்காலிக வேலையை நிரந்தரமாக்கவும், தற்போதைய ரூபாய் 12,500 தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை சம்பளமாக வழங்க வலியுறுத்தியும் ஜனவரி 8-ம் தேதி முதல் போராட்டத்தை சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் நடத்தி வருகின்றார்கள்.


போராட்டக் களத்தில், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் சொன்னபடி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் ஓங்கி முழங்கி வந்தனர்.


“கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.35 ஆயிரம் கோடி, பொங்கல் போனஸ், பொங்கல் பரிசி வழங்க ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் சுமார் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


இதை அரசு கொள்கை முடிவாக திமுக தேர்தல் வாக்குறுதி 181-ஐ அரசாணையிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, பொங்கல் போனஸ் வழங்கி முதல்வர் இதனை பொங்கல் பண்டிகை பரிசாக அறிவிக்க வேண்டும்.” என்று போராடிய ஆசிரியர்கள் கோரினர்.


No comments:

Post a Comment

Post Top Ad